மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு... மேகாலயா சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்
மத்திய அரசு கொண்டு வந்த மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேகாலயா சட்டசபை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
ஷில்லாங்: இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வதை தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி மேகாலயா சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக மாடுகளை விற்க, மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த உத்தரவுக்கு எதிராக, கேரள சட்டசபையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா சட்டசபையிலும், மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக, நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'மத்திய அரசின் இந்த சட்டத்தால், மற்ற வடகிழக்கு மாநிலங்களை போலவே, மேகாலயாவின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். மக்களின் உணவு பழக்கத்திற்கு எதிரான இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்' என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேகாலயா சட்டசபையில், காங்கிரஸ் முதல்வர் முகுல் சங்மா கொண்டு வந்த தீர்மானத்திற்கு, அனைத்துக் கட்சி, எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு மேகாலயா பாஜக, 2018ல் வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சி அமைந்தால் மாட்டிறைச்சி தடையை மேகாலயாவில் அமல்படுத்த மாட்டோம், தடையை நீக்குவோம் என்று அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் மேகாலயா மாநில ஆளும் கட்சியான காங்கிரஸ் மத்திய அரசை எதிர்த்துச் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications