ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி இடைத்தேர்தலில் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் மெகபூபா முப்தி 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த முப்தி முகமது சயீத் கடந்த ஜனவரி 7-ந் தேதி உயிரிழந்தார். மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள் முப்தியின் மகள் மெகபூபா முப்தியை சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
இக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜகவும் மெகபூபா முதல்வராக பதவியேற்பதற்கு ஆதரவு அளித்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக அண்மையில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து முப்தி முகம்து சயீத் மறைவால் காலியான அனந்த்நாக் சட்டசபை தொகுதிக்கு கடந்த 22-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தற்போது அனந்த்நாக் லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ள மெகபூபா முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள இந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஹிலால் ஷாவும், தேசிய மாநாட்டு கட்சி சார்பில் இப்திகர் மிஸ்கரும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
இந்த வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் வாக்கு எண்ணும் இயந்திரம் சீல் வைக்கப்படவில்லை எனக் கூறி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மெகபூபா முப்திக்கு 17,000 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் ஹிலால் ஷாவுக்கு 5,589 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து மெகபூபா முப்தி சுமார்ர் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.