வானத்தில் "ஆயா" மினி "நிலா" சுட்டுப் போட்டதை எத்தனை பேர் பாத்தீங்க.. கையைத் தூக்குங்க!
கொல்கட்டா: 15 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் அரிய நிகழ்வான, ‘மினி மூன்' என்ற சிறிய நிலவு நேற்று வானில் தோன்றியது.
பூமியை நிலா சுற்றி வருகிறது. சூரியனை பூமி சுற்றி வருகிறது என்பதெல்லாம் நாம் பள்ளியிலேயே படித்த பாடங்கள் தான். அந்த வகையில், பூமியை வட்டப்பாதையில் சுற்று வரும் நிலவானது, சில சமயங்களில் பூமியை விட மிக அதிக தொலைவில் செல்வதுண்டு. அத்தகைய நிகழ்வை அறிவியலாளர்கள் அபோகீ என குறிப்பிடுகின்றனர்.
இந்த அபோகீ நிலையின் போது பூமியில் இருந்து சுமார் 4 லட்சத்து 6 ஆயிரத்து 350 கி.மீ. தொலைவில் நிலா இருக்கும். அப்போது நிலவின் அளவு வழக்கத்தை விட சற்று சிறிதாகக் காணப்படுவதால் அது மினி மூன் என்றும் கூறப்படுகிறது.
மினி மூன்...
இந்நிலையில், இந்த அரிய நிகழ்வானது நேற்றிரவு 9.35 மணியளவில் வானில் ஏற்பட்டது. அப்போது சராசரியாக பூமியில் இருந்து 4 லட்சத்து 6 ஆயிரத்து 350 கிலோமீட்டர் தொலைவில் நிலா இருந்ததால், அது பிரகாசமாக இல்லாமல் மங்கலாக காட்சியளித்தது.
பகலிலும்...
இது நேற்றிரவு மட்டுமின்றி இன்று காலை 10.55 மணியளவிலும் வானில் ஏற்படும், ஆனால் அதனை காண இயலாது என கொல்கத்தாவில் அமைந்துள்ள எம்.பி. பிர்லா பிளேனட்டோரிய இயக்குநர் தேவிபிரசாத் துவாரி தெரிவித்திருந்தார்.
15 வருடங்களுக்குப் பிறகு...
சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு நேற்றிரவு இந்த மினி மூன் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்து வருகிற 2030ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இதேபோன்ற நிகழ்வு வானில் நடைபெறும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சூப்பர் மூன்...
இதேபோல், பூமிக்கு மிக அருகில் நிலவு வரும்பொழுது, அதன் அளவு மிகப்பெரியதாகத் தோன்றும். அதனை சூப்பர் மூன் எனக் கூறுவர். அதன் அளவுடன் ஒப்பிடுகையில் இந்த மினி மூன் 14 சதவீதம் சிறய அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.