பெட்ரோல், டீசல் விலையும் ஜிஎஸ்டிக்குள் வரவேண்டும்.. அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமிக்ஞை!
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர சரியான நேரம் வந்துவிட்டதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
டெல்லி : பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதில் அரசு தலையிடாது என்றும், விலை நிர்ணயத்தை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர இதுவே சரியான நேரம் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
தினசரி கணக்கில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் அமலுக்கு வந்தது முதல் கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை சுமார் ரூ. 6க்கு, டீசல் விலை ரூ. 4 வரையும் உயர்வு கண்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் கிடுகிடுவென விலையை உயர்த்தி வருவ்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் ,டீசல் விலையை தினமும் மாற்றும் திட்டத்தில் தலையிட மத்திய அரசு விரும்பவில்லை. சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருப்பதாகவும் விரைவில் விலைகுறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டிக்குள் வர வேண்டும்
பெட்ரோல் ,டீசல் விலையை தினமும் மாற்றும் திட்டத்தில் தலையிட மத்திய அரசு விரும்பவில்லை. பல மாநிலங்கள் மதிப்பு கூட்டு வரியை அதிக அளவில் உயர்த்தியுள்ளன. இதனால் விலையேற்றம் பிரதிபலிக்கிறது, பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டிய சரியான நேரம் இதுவே.

சுங்க வரி
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சுங்க வரியை குறைப்பது பற்றி நிதித்துறை அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும். மக்களின் விருப்பத்தையும் நாட்டில் நடைபெற வேண்டிய வளர்ச்சி திட்டங்களையும் மத்திய அரசு சமநிலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

நிதி ஆதாரம் இல்லை
மிகப்பெரிய அளவிலான தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள், ரயில்வே நவீனமயம் மற்றும் விரிவாக்கம், கிராமப்புற சுகாதாரம், குடிநீர் வசதி, ஆரம்ப சுகாதாரம், கல்வி திட்டங்கள் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடு அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இந்த திட்டங்களுக்கான நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைக்கும்?

பட்ஜெட் பற்றாக்குறை
சுங்க வரி உயர்வால் 2014 - 2015ல் ரூ. 99 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. 2016 - 2017ல் இது 2 லட்சத்து 42 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வருவாய் காரணமாக, பட்ஜெட் பற்றாக்குறை சரி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் இல்லை
சுங்க வரியில் 42 சதவீதம் மாநில அரசுகளின் அடிப்படை கட்டமைப்பு வசதி மற்றும் நலவாழ்வு திட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.32 உயர்ந்து ரூ.70.38க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.36 உயர்ந்து, ரூ.58.72 க்கும் விற்கப்படுகிறது. கடந்த 2013, செப்டம்பர் 14ல் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.06க்கு விற்றது எனவே இது அதிக விலை கிடையாதுஎன்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications