கபடி விளையாட்டில் தவறி விழுந்த அமைச்சர் ரோஜா செல்வமணி.. சாரி கேட்ட மாணவிகளை தட்டி கொடுத்து உற்சாகம்
அமராவதி: ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா மாணவர்களுடன் கபடி , கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். அப்போது மாணவிகள் பிடித்த போது அவர் தடுக்கி கீழே விழுந்தார். மாணவிகள் சாரி மேடம் என சொன்னதும் ஹே நோ பிராப்ளம் விடுங்க என சிரித்துக் கொண்டே கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
90 களில் பிரபலமான நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர் நடிகை ரோஜா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமான ரோஜா, இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகள், மகன் உள்ளனர். 90களில் பலரது கனவுக்கன்னியாக வலம் வந்தார். இவர் சில ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கினார்.
சந்திரபாபு நாயுடுகாரு! உங்களுக்கு வயசாகுது.. வீட்டில் ரெஸ்ட் எடுங்கள்! அமைச்சர் ரோஜா அட்வைஸ்
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்
இந்த நிலையில் இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். நகரி தொகுதியில் தொடர்ந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்று வருகிறார். இவர் தொடர்ந்து நகரி மக்களின் நலனுக்காக போராடி வருகிறார். நகரி தொகுதியிலேயே பிரம்மாண்டமாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டிலேயே பெரும்பாலும் ரோஜா இருந்து வருகிறார். மக்கள் அழைத்த குரலுக்கு ஓடி போய் உதவுகிறார் என தொகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைகிறார்கள். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலங்கு தேசம் கட்சியில் உறுப்பினராக இருந்த ரோஜாவை சொந்த கட்சியினரே தோற்கடித்ததாக கூறப்படுகிறது.
ஒய் எஸ் ஆர் காங்கிரஸில் ரோஜா
இதனால் விரக்தி அடைந்த ரோஜா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியில் தான் சந்தித்த தோல்விகளை வெற்றிப் படிகளாக மாற்றியுள்ளார் ரோஜா. இந்த விடாமுயற்சி, கடின உழைப்பு, நகரி தொகுதிவாசியாகவே ஆகிவிட்ட அர்ப்பணிப்பு உள்ளிட்டவைகளால் ரோஜாவை தேடி அமைச்சர் பதவியும் வந்துள்ளது.
ரோஜாவுக்கு அமைச்சர் பதவி
அவர் ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா துறை அமைச்சராக உள்ளார். அமைச்சராவதற்கு முன்பே நகரி தொகுதியில் தமிழ் வழி பள்ளிகளில் தமிழ் புத்தகங்களை கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். கோரிக்கை விடுத்துவிட்டு ரோஜா தனது தொகுதிக்கு போவதற்குள் அவரது கோரிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியதாக பெருமிதம் பொங்க ரோஜா தெரிவித்தார்.
ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள்
இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாள் அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி நகரி தொகுதியில் ஜெகண்ணா விளையாட்டி போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் மாணவர்களுடன் கைப்பந்து விளையாடினார்.
தொப்பியுடன் கிரிக்கெட் விளையாடிய ரோஜா
அது போல் தலையில் தொப்பி அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடி போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும் மாணவிகளுக்கிடையே நடந்த கபடி போட்டியில் இடுப்பில் புடவையை செருகியபடி அமைச்சர் ரோஜா கபடி கபடி கபடி என விளையாடினார். ஒரு கட்டத்தில் அமைச்சர் ரோஜாவை மாணவிகள் சுற்றி வளைத்த போது அவர் கீழே விழுந்துவிட்டார். உடனே சாரி கேட்ட மாணவிகளிடம் ஒன்றும் இல்லை, விடுங்க என்றார். இந்த விளையாட்டு போட்டியின் பொறுப்பாளரும் மாணவிகளை திட்டிய போது ரோஜா தடுத்தார். இன்னும் சிலர் மாணவிகளை கடிந்த போதும் சிரித்த முகத்துடன் ஒன்றும் இல்லை விடுங்க என கூறி அவர்களை தடுத்தார். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அமைச்சர் ரோஜா மாணவர்களுடன் நடனமும் ஆடி மகிழ்கிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாரியம்மன் கோயிலில் ரோஜா சுவாமி தரிசனம் செய்து அங்கு கோயில் விழாவையும் தொடங்கி வைத்துள்ளார். சினிமா, அரசியலில் கொடி கட்டி பறக்கும் ரோஜா, தற்போது விளையாட்டிலும் ஆர்வமாக பங்கேற்று விளையாடுவது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த சட்டசபை தேர்தல்
வரும் 2024 ஆம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சியே தொடர தேவையான முன்னெடுப்புகளை ரோஜா செய்து வருவதாக கூறப்படுகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் முனனாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 2014 இல் எதிர்க்கட்சியாக இருந்த போது ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியில் மற்ற எம்எல்ஏக்களை விட, ஜெகன் மோகன் ரெட்டியே ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு ரோஜா பாயிண்ட் பாயிண்ட்டாக கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.