சுங்க கட்டண வசூலை எதிர்த்துப் போராட்டம்: சாலைமறியலில் ஈடுபட்ட ராஜ் தாக்கரே கைது
மும்பை: மராட்டியத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப் படுவதை எதிர்த்து மும்பையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மராட்டியத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப் படுவதற்கு ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 9-ந் தேதி புனேயில் நடைபெற்ற கட்சி பொதுகூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, ‘‘சுங்க கட்டண வசூலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 12-ந் தேதி மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். மராட்டிய அரசுக்கு தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் பார்க்கலாம்'' என தெரிவித்திருந்தார்.
ராஜ் தாக்கரே அறிவித்தபடி, இன்று சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த ராஜ் தாக்கரேவை சாம்பூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை போலீஸ் அதிகாரி கேமந்த் உறுதி செய்துள்ளார்.
மேலும், மாநிலத்தின் பிற பகுதிகளில் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடாத வண்ணம் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலயங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.