தனியார் பெரு நிறுவனங்களுக்காகவே நிலம் கையகப்படுத்தும் சட்டம் - வைகோ
டெல்லி: தனியார் பெரு நிறுவனங்களின் நலன்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்ட மசோதாவை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் அரசு முயற்சி செய்கிறது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டினார்.
விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்ட மசோதா இருப்பதாகக் கூறி டெல்லியில் அண்ணா ஹசாரே, மேதா பட்கர் ஆகியோர் கடந்த இரு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், புதுச்சேரியில் உள்ள தேசிய மீனவர் பேரவை அமைப்பு தலைவர் இளங்கோ உள்ளிட்ட பலர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது வைகோ பேசியதாவது:
"ஏழை விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு "நிலம் கையகப்படுத்துதல்' தொடர்பான அவசரச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரு முதலாளிகளுக்கு உதவும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன், "மக்களால், மக்களுக்காக, மக்களே ஆட்சி செய்வதுதான் அரசு' எனக் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசோ கார்ப்ப்ரேட் நிறுவனங்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அவசர சட்ட மசோதாவை மத்திய அரசு குப்பையில் எறியவில்லை எனில் மோடியின் அரசை, மக்கள் தூக்கி எறிந்து விடுவர். இச்சட்டத்தை நிறைவேற்றி ஏழை விவசாயிகளின் நிலங்களைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் அரசு ஈடுபடத் திட்டமிடுகிறது. விவசாயிகளின் ஒப்புதலின்றி விவசாய நிலத்தை கையகப்படுத்தலாம் என்ற நரேந்திர மோடி அரசின் திட்டத்தை ஒரு போதும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்," என்றார் வைகோ.