மன் கி பாத்... மோடியுடன் சேர்ந்து ஆல் இந்தியா ரேடியோவில் பேசுகிறார் ஒபாமா!
டெல்லி: குடியரசு தின விழாவிற்காக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, மோடியுடன் இணைந்து ஆல் இந்தியா ரேடியோவின் ‘மன் கி பாத்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் ஒபாமாவிடம் கேட்க விரும்பும் கேள்விகளை மக்கள் அனுப்பலாம் என மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்கிறார். இதற்காக வரும் 24ம் தேதி ஒபாமா குடும்பத்தினர் டெல்லி வருகின்றனர்.
மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா மகாத்மா காந்தி சமாதிக்கு செல்ல உள்ளார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக ஆல் இந்தியா ரேடியாவில் உரையாற்ற உள்ளனர். இத்தகவலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது :-
நமது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பங்கேற்பதால் இந்த மாதத்தின் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது. நமது எண்ணங்களை அவருடன் நான் பகிர்ந்து கொள்வேன்.
ஜனவரி 27ம் தேதி அவருடன் மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒபாமாவுடனான மன் கி பாத் நிகழ்ச்சி உங்களின் கேள்விகள் இல்லாமல் முழுமை பெறாது. அதனால் உங்களின் கேள்விகளை 25ம் தேதிக்குள் அனுப்புங்கள்.
வெளிப்படையான விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எங்கள் அரசு உங்களுக்கு அளித்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி கேள்விகளை அனுப்புங்கள்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒபாமா பங்கேற்கும் இந்த மறக்கமுடியாத மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் இந்தியா-அமெரிக்கா உறவு தனித்துவம் பெறும் என பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.