தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை... மவுனம் கலைத்த பிரதமர் மோடி உருக்கம்
லக்னோ: ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டது தேசத்துக்கு மிகப் பெரிய இழப்பு என்று பிரதமர் மோடி கண்கலங்கியபடி உருக்கமாக கூறியுள்ளார்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த தற்கொலைக்கு காரணமே மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரே, ஸ்மிருதி இரானிதான் என குற்றம் சாட்டி அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். தற்போது உத்தரபிரதேசத்தின் லக்னோவில் அம்பேத்கர் மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் ரோகித் வெமுலா தற்கொலை குறித்து குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் பேசுகையில், எனது நாட்டின் இளைஞர் ரோகித் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தது, மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக அமைந்தது. அவரது குடும்பத்தினர் கண்டிப்பாக ஒரு கடினமான நிலையில் இருந்திருப்பார்கள்'
பாரத மாதா, தன் மகனை இழந்து இருக்கிறார். அதற்கு காரணங்கள் இருக்கலாம். அதில் அரசியல் இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், ஒரு தாய், தன் மகனை இழந்து தவிக்கிறார் என்பதுதான். நான் அந்த வலியை நன்றாக உணர்கிறேன். ஒரு தாய், தன் மகனை இழக்கிறபோது ஏற்படுகிற துயரத்தை விட பெரிதாக எந்த துயரமும் இருக்காது என்றார் உருக்கமாக.
அப்போது பிரதமர் மோடியின் கண்கள் கலங்கின. பின்னர் அம்பேத்கரைப் போல அவமானங்களை எதிர்கொண்டு முன்னேறவும் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.