மோடியின் அமேதி கூட்டம் குறித்து விசாரணை: ஸ்மிருதி இரானிக்கு நெருக்கடி!
டெல்லி: அமேதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி கலந்து கொண்ட பேரணிக்கான செலவு தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை விட அதிகம் ஆகியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி அமேதி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக கடந்த 5ம் தேதி பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் மோடி கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை விட அதிகம் செலவு செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோடி கூட்டத்திற்காக செலவு செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து மோடி கூட்டத்திற்கு ஆன செலவு குறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து வருவதாக மூத்த தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அப்படி மோடி கூட்டத்திற்கு அதிகமாக செலவு செய்யப்பட்டது உறுதியானால் ஸ்மிருதி இரானியின் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி புகார் அளித்து ஸ்மிருதி இரானியை தகுதியை ரத்து செய்ய வலியுறுத்த உள்ளது.
தேர்தல் கூட்டத்திற்கான செலவை மறைத்து பொய்யான கணக்கை காட்டுவது உள்ளிட்ட குற்றங்களுக்காக வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.
அமேதி கூட்டத்தில் மோடி பேசியபோது அதே மேடையில் தான் ஸ்மிருதி இரானி இருந்தார். அதனால் மோடி கூட்டத்திற்கான செலவு இரானியின் பெயரில் சேரும். அமேதி தொகுதியில் தான் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.