மாஸ்டர்ஸ்ட்ரோக்குக்கு பிறகு நடந்த பண பரிவர்த்தனை விவரங்களை பாஜக எம்.பி.க்களிடம் கேட்கும் மோடி
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்த பிறகு நடந்த வங்கி பண பரிவர்த்தனை விவரங்களை பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரும் ஜனவரி மாதம் 1ம் தேதிக்குள் சமர்பிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு அறிவித்தார். அதன் பிறகு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அல்லாடி வருகிறார்கள்.
செலவுக்கு கையில் பணம் இல்லாமல் வங்கி ஏடிஎம்கள் முன்பு மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் டெல்லியில் நடந்த பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி கூறுகையில்,
பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான தங்களின் வங்கி கணக்கு பண பரிவர்த்தனை விவரங்களை ஜனவரி 1ம் தேதி கட்சி தலைவர் அமித் ஷாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
கறுப்பு பணத்தை வெள்ளையாக்க வருமான வரி சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்படவில்லை. கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை நலத்திட்டங்கள் மூலம் அவர்களுக்கு செலவு செய்யவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. கறுப்பு பண சுமையால் நாடு மூழ்கிவிட விட மாட்டேன் என்றார்.