மேற்கு வங்கத்தில் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் செல்லுபடியாகாது மோடி அலை?
டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா முட்டி மோதினாலும் காலூன்ற முடியாத 'சமூக சூழலே' இருந்து வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தேசியத் தலைவராக உத்தரப்பிரதேச தேர்தல் வெற்றிக்குப் பொறுப்பாளராக இருந்த அமித்ஷா நியமிக்கப்பட்டார்.
அமித்ஷா
அமித்ஷா கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறார். ஆனால் இந்த பட்டியலில் இடம்பெறாத ஒரு மாநிலமாக இருக்கிறது மேற்கு வங்கம்..
இடதுசாரிகள் அல்லது காங்கிரஸ்
மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரை இடதுசாரிகள் அல்லது காங்கிரஸ் கட்சி மீதுதான் அம்மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதனால்தான் நாடு விடுதலை அடைந்த 67 ஆண்டுகாலத்தில் காங்கிரஸும் இடதுசாரிகளும் மாறி மாறி அம்மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றன.
நாட்டு விடுதலைக்கான பங்களிப்பு
இதைவிட மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது நாட்டு விடுதலைக்கான பங்களிப்பை பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான சங்க பரிவாரங்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் அம்மக்களிடம் இருந்து பாஜக மற்றும் அதன் தாய் அமைப்புகளை அன்னியப்படுத்தி வைத்துள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதனால்தான் இந்துத்துவா அரசியல் என்பது மேற்கு வங்க மாநிலத்தில் செல்லுபடியாகாத ஒன்றாக இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.
தலைவர்கள் இல்லை..
அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு என முக்கிய தலைவர்கள் எவரும் இல்லை. பாஜகவில் தேசிய அளவிலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சொல்லிக்கொள்ளும்படியான தலைவர் எவரும் இல்லை.
மாற்று அரசியல் சக்தி
மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனில் தாம் ஒரு மாற்று அரசியல் சக்தி என்பதை நிரூபிக்க அது பயணிக்க வேண்டிய தொலைவு நீண்ட தூரம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சாத்தியம் குறைவு
இதனால்தான், என்னதான் நாடு முழுவதும் மோடி அலை வீசினாலும் மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா தலை எடுப்பதற்கான சாத்தியம் குறைவு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.