மோடி பிரதமரானால் காஷ்மீர் இந்தியாவிலிருந்து துண்டிக்கப்படும்... உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: மோடி தலைமையிலான அரசு காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து விடும் என்று கூறியுள்ளார் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா.
பாஜக தனது பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்துள்ளது. அவரும் நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், 16வது லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி தலைமையிலான அரசு மத்தியில் அமைந்தால் அது காஷ்மீருக்கு தீங்கானதாக அமையும் என கருத்துத் தெரிவித்துள்ளார் உமர் அப்துல்லா.
இது தொடர்பாக 'தி இந்து' நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:
சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு திருத்தம்...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 திருத்தி அமைக்கப்படும் என்ற மோடியின் வாக்குறுதியை நிறைவேற்றப் பட்டால், அது இந்தியா என்ற கூட்டமைப்புக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் இடையே பாலமாக உள்ள அரசியல் சாசனத்தை சிதைப்பதாகிவிடும்.
மோசமான விளைவுகளைத் தரும்...
அதே போல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஏதாவது ஒரு பகுதியை பிரிக்கும் புத்த மதத்தவர் அதிகம் வசிக்கும் லடாக் பகுதிக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதி மோசமான விளைவுகளை தரும்.
மத அமைதிக்கு பங்கம்...
இதனால் மாநிலத்தில் மத அமைதிக்கு பங்கம் ஏற்படும், உறவுகளில் விரிசல் ஏற்படும். பெரும்பாலான இந்திய மக்களுக்கு இத்தகைய விளைவுகள் குறித்து இன்னும் புரிதல் ஏற்படவில்லை என தோன்றுகிறது.
வெவ்வேறு கொள்கைகள்....
வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த போதும், சட்டப்பிரிவு 370-ஐ திருத்தி அமைப்பது பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், கூட்டணி கட்சிகளின் கொள்கைளுக்கு மரியாதை அளித்து அந்த யோசனையை வாஜ்பாய் புறக்கணித்ததார். வாஜ்பாயும் - நரேந்திர மோடியும் வெவ்வேறு சிந்தனைகள் கொண்டவர்கள்.
மோடியின் வியாபாரம்...
மேலும், வாஜ்பாய் - நரேந்திர மோடி இருவரையும் சமநிலையில் வைத்து ஒப்பிட்டு பார்க்க முடியாது. மோடி பச்சை பொய்களையும், பாதி உண்மைகளையும் வைத்து வியாபாரம் செய்பவர்.
வரலாற்று உண்மை...
காஷ்மீரி பண்டிட்டுகளை வெளியேற்றியதாக என் தந்தை, என் தாத்தா மீது மோடி குற்றம் சாட்டினார். ஆனால், வரலாற்று உண்மை என்னவென்றால், பண்டிட்டுகளுடன் சேர்த்து தேசிய மாநாட்டுக் கட்சியும் பலி கொடுக்கப்பட்டது என்பதேயாகும்.
விரிசலுக்குக் காரணம்...
2002-க்குப் பின்னர் வாஜ்பாயுடனான தேசிய மாநாட்டுக் கட்சியின் உறவு படிப்படியாக சிதைந்தது. 2002 - 2005 காலகட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அப்போதைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையத்துக்கு ஆதரவாக செயல்பட்டதே விரிசலுக்கு காரணமாக இருந்தது' என தனது பேட்டியில் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.