ஒரு நல்ல செய்தி... தென்மேற்கு பருவமழை நல்லா பெய்யுமாம் - ஸ்கைமெட் கணிப்பு
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான காலத்தில் தொடங்கி இயல்பான அளவு பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.
டெல்லி: நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவு பெய்யக்கூடும் 100 சதவிகித அளவிற்கு பதிவாக வாய்ப்பு உள்ளதாக ஸ்கைமெட் எனப்படும் தனியார் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும். செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும்.
இந்தியாவின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்கு பருவமழை முக்கிய பங்காற்றுகிறது. தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கு இரண்டு மாத கால அவகாசம் உள்ளது.
பருவமழை நன்றாக இருந்தால் உற்பத்தி அதிகரிக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.
பருவமழை எப்படி?
விளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில், 2018ஆம் ஆண்டு 9 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி 5 பலகீனம் அடையும் 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும். தமிழகம் முழுவதும் நல்ல மழை பொழியும் என கணித்துள்ளது.
அணைகள் நிரம்பும்
ஆடி முதல் கார்த்திகை மாதம் வரை நல்ல மழை பெய்யும், தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், அணைகள் நிரம்பி வழியும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பே பஞ்சாங்கம் கணித்து விட்டது. தென்மேற்கு பருமழை காலமான ஆடி, ஆவணி மாதத்தில் பகல், இரவில் எல்லா இடங்களிலும் மழைபொழியும். மலை பிரதேசங்களில் நல்ல மழை பெய்யும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
இந்நிலையில் தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமெட் கணித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கமான அளவையொட்டியே இருக்கும், எனினும் தென்னிந்தியாவில் வழக்கத்தை விடவும் பருவமழை குறைவாக பெய்ய வாய்ப்புள்ளது என கணித்துள்ளது.
பருவமழை சராசரி
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி இயல்பான அளவு பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஜூன் மாதத்தில் அதிக அளவு மழை இருக்கும். ஜூலையில் இயல்பான அளவிலும், ஆகஸ்ட்டில் இயல்புக்கு குறைவாகவும் இருக்கும். நீண்டகால பொது சராசரியை கணக்கிட்டால் 100 சதவீத அளவில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட இந்தியாவில் மழை
நாடுமுழுவதும் மழையளவு சராசரியாக இருந்தாலும், குறிப்பிட்டு பார்க்கும்போது, தென்னிந்திய தீபகற்ப பகுதியிலும், வட இந்தியாவின் சில பகுதிகளிலும் சராசரி அளவை விடவும் குறைவாக பெய்ய வாய்ப்புள்ளது. பஞ்சம் ஏற்பட பூஜ்ஜியம் சதவீதமே சாத்தியம் இருக்கிறது என்று கணித்துள்ளது.
விவசாயம் செழிக்க
இந்தியாவை பொருத்தவரை பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் 887மிமீ மழை அளவு பதிவாகும். இந்த ஆண்டு இது சாத்தியம்தான் என்பதால் விவசாயிகள் சற்றே ஆறுதலடையலாம். எனினும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் விவசாயம் பிசியாக நடைபெறும் கால கட்டத்தில் பருவமழை குறைய வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.
பருவமழை முன்னறிவிப்பு
இந்தியாவில் பருவமழை எப்படியிருக்கும் என இந்த மாத இறுதியில் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து அறிவிக்கும். இந்த ஆண்டு எல்நினோ ஏற்பட்டு அதனால் பருவமழை பொய்த்துப்போவதற்கான சாத்தியக்கூறு இல்லை என வானிலை ஆய்வு மையங்கள் கணித்துள்ளது விவசாயிகள், பொதுமக்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.