விபரீதமான தண்டனை: 70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த தாய் - 10 வயது சிறுமி உயிரிழப்பு
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கள்கிழமை) வெளியான பிரதான செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு
உறவினர் வீட்டில் 70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த, தாயின் விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழந்த செய்தி 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜா-மணிமேகலை. இத்தம்பதியின் மூத்த மகள் மகாலட்சுமி (10). சிறுமி மகாலட்சுமி, அடிக்கடி தன் பெற்றோரிடமிருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்து, அதில் திண்பண்டங்கள் வாங்குவார் என்றும், இதனால், மகளை மணிமேகலை கண்டித்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜன.6 அன்று தன் மாமா முருகன் வீட்டுக்கு சிறுமி சென்ற நிலையில், அங்கு 70 ரூபாயை திருடியதாக, முருகன் மணிமேகலையிடம் கூறியுள்ளார்.
- காஞ்சிபுரத்தில் குற்றச்செயலில் ஈடுபடுவோரின் தொடர் கைதுகள்; குற்றங்கள் குறைகிறதா?
- ஆன்லைன் மோசடி: பணத்தை இரட்டிப்பாக்க ஆசைப்பட்டு ஏமாற்றப்பட்ட கிராம மக்கள்
இதையடுத்து, சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துவந்து, தண்டனையாக, சுடுநீரில் மிளகாய் பொடியை கலந்து நுகரச்செய்துள்ளார் மணிமேகலை. மேலும், சிறுமியின் வாய் மற்றும் தொடையில் சூடு போட்டுள்ளார்.
மிளகாய் பொடியை நுகர்ந்ததால் இரண்டு நாட்களாக சாப்பிட முடியாத நிலையில் இருந்த சிறுமி மகாலட்சுமி, நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் மணிமேகலை கைது செய்யப்பட்டார்.
தங்கையை திருமணம் செய்ததற்காக நண்பனை கொலை செய்த அண்ணன்
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் தன் தங்கையை வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட நண்பனை அண்ணன் கொன்ற சம்பவம் குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா சிறையில் நீதிமன்ற காவலில் இருந்தபோது மனீஷ் மற்றும் விகாஸ் என்ற இருவர் நண்பர்களாகியுள்ளனர். இதில் விகாஸ் பெட்ரோல் பங்க்கில் கொள்ளையடித்ததற்காகவும் மனீஷ் பாலியல் வன்புணர்வு வழக்குக்காகவும் நீதிமன்றக் காவலில் இருந்துள்ளனர்.
முதலில் சிறையில் இருந்து வெளிவந்த விகாஸ் மனீஷின் ஜாமீனுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதன் பிறகு அவரை விகாஸ் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். விகாஸின் தங்கையுடன் நட்பாக பழகிய மனீஷ் 10 மாதங்களுக்கு முன்பு அவரது தங்கை பூஜாவை வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து விகாஸ் மனீஷை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் பூஜாவும் மனீசும் டெல்லி சென்று அங்கு வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு விகாஸை சந்திக்க வந்த மனீஷை விகாஸ் கொலை செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை ராஜ்கர் பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் மனீஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விகாஸ் தலைமறைவாகி விட்டதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் காவல் துறையினர் கூறினர்.
திருமண உறவை நீதிமன்ற தீர்ப்பால் புதுப்பிக்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து
நீதிமன்ற தீர்ப்பால் முடிந்துபோன திருமண உறவை புதுப்பிக்க வைக்க முடியாது என, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாக, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த அந்நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதிக்கு, விவாகரத்து வழங்க மறுத்த குர்கோவன் குடும்பநல நீதிமன்றம் 2015-ல் விவாகரத்து வழங்க மறுத்த உத்தரவை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அப்போது, "சம்மந்தப்பட்டவர்கள் விரும்பாமல் நீதிமன்ற தீர்ப்பால் முடிந்துபோன திருமண உறவை புதுப்பிக்க வைக்க முடியாது. ஏனெனில், திருமணம் என்பது மனித உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டது. எனவே, அதனை செயற்கையான முறையில் ஒன்றிணைக்க முடியாது" என, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், விரும்பாமல் வாழ்ந்து வரும் தம்பதிக்கு விவாகரத்து வழங்காமல் இருப்பது தோல்வியையே தரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- ஏழை நாடுகளை தனது கடன் வலையில் சிக்க வைக்கிறதா சீனா?
- "நரகத்தின் நுழைவாயிலை" மூட துர்க்மெனிஸ்தான் முடிவு
- புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மரத்துக்கு நடிகர் டிகாப்ரியோ பெயரை விஞ்ஞானிகள் வைத்தது ஏன்?
- கொரோனா நோய் தொற்று விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா?
- மொரிஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை
- சத்ய பால் மாலிக்கின் சர்ச்சை பேச்சுகள்: மோதி, அமித் ஷா பொறுமைக்கு என்ன காரணம்? யார் இவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்