ம.பி.யில் பாஜக ஆபரேஷன் அம்பேல்? சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்- ஆளுநரிடம் கமல்நாத்!
போபால்: மத்திய பிரதேச சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தாம் தயார் என்றும் சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்றும் ஆளுநர் லால்ஜி தாண்டனிடம் மாநில முதல்வர் கமல்நாத் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் கமல்நாத்தோ பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த கட்சி எம்.எல்.ஏக்களை வளைத்து போட்டு ஆட்டம் காட்டினார்.
இந்த நிலையில் கமல்நாத்துக்கு எதிராக காங்கிரஸில் போர்க்கொடி தூக்கினார் ஜோதிராதித்யா சிந்தியா. அவரை தங்கள் பக்கம் இழுத்தது பாஜக.

கர்நாடகாவில் சிறை வைப்பு
மேலும் அக்கட்சி ஆளுகிற கர்நாடகாவில் 19 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அடைத்துவைத்துள்ளது பாஜக. கமல்நாத்துக்கு எதிராக 22 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டதால் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது என்கிறது பாஜக. ஆனால் 19 எம்.எல்.ஏக்களை போலீஸ் கஸ்டடியில் அடைத்து வைத்திருக்கிறது கர்நாடகா பாஜக அரசு; அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்கிறது காங்கிரஸ்.

ஆளுநருடன் கமல்நாத் சந்திப்பு
பெங்களூருவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவ விருப்பமில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மத்திய பிரதேசத்தில் பாஜக நடத்த முயற்சித்த ஆட்சி கவிழ்ப்பு ஓரங்க நாடகம் அரங்கேறவில்லை. இந்நிலையில் மாநில ஆளுநர் லால்ஜி டாண்டனை முதல்வர் கமல்நாத் இன்று சந்தித்து பேசினார்.

ஆளுநரிடம் சவால்
அப்போது டாண்டனிடம் 3 பக்க கடிதம் ஒன்றை கமல்நாத் கொடுத்தார். அதில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை எப்படியெல்லாம் பாஜக கடத்தி அடைத்து வைத்திருக்கிறது என்பது விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டசபையை உடனே கூட்டினால் தம்மால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்றும் டாண்டனிடம் கமல்நாத் வலியுறுத்தியுள்ளார். 230 இடங்களைக் கொண்ட மபி சட்டசபையில் 2 இடங்கள் காலியாக உள்ளன.

ஆபரேஷன் அம்பேல்?
காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு 109 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் உள்ளன. இவர்கள் தவிர 4 சுயேட்சைகள், பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள், சமாஜ்வாதி கட்சியின் 1 எம்.எல்.ஏ. உள்ளனர். தற்போதைய நிலையில் மத்திய பிரதேசத்தில் பாஜக முயற்சித்த ஆட்சி கவிழ்ப்பு ஆபரேஷன் அம்பேலாகி இருக்கிறது என்பது மட்டும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications