பெண்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு டெல்லியில் பேரணி.. கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணிவகுப்பு
பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரி ராஜ்ய சபா எம்பி கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் டெல்லியில் இன்று பேரணி நடத்தினார்கள்.
டெல்லி: நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை உடனயாக கொண்டு வர வேண்டும் என்று ராஜ்ய சபா எம்பி கனிமொழி கோரியுள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழி வகை செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப் பட்டது. இச்சட்டத்தின்படி பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. இதே போன்று நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களின் பங்கு இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடிய காலமாக இந்திய அரசியல் சூழலில் எழுப்பப்பட்டு வருகிறது.
காத்திருப்பு..
பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வருவதை தொடக்கத்தில் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் 2010ம் ஆண்டு இந்த சட்டம் ராஜ்ய சபாவில் நிறைவேறியதே தவிர, லோக் சபாவில் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் இடஒதுக்கீட்டிற்காக பெண்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக மகளிரணி பேரணி
இந்நிலையில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கால தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திமுக மகளிரணி சார்பில் டெல்லியில் இன்று பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு திமுக மகளிர் அணி செயலாளரும், ராஜ்ய சபா எம்பியுமான கனிமொழி தலைமை தாங்கினார்.
கொடி ஏந்தி கோஷம்
இந்தப் பேரணியில் பங்கேற்ற திமுகவைச் சேர்ந்த பெண்கள் திமுக கொடியை கையில் ஏந்தி பெண்களுக்கு தாமதமின்றி 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்தப் பேரணிக்கு டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தள்ளிப் போடக் கூடாது..
பேரணியின் போது கனிமொழி எம்பி, பெண்கள் இட ஒதுக்கிடு மசோதா ஒவ்வொரு காலக் கட்டத்திலும் திட்டமிட்டு தள்ளி போடப்பட்டு வருகிறது. இப்போது இந்த மசோதாவை நிறைவேற்ற நல்ல சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, உடனடியாக இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறினார்.
காலம் கனிந்து…
பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று எதிர்த்த கட்சிகள் இப்போது பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உள்ளன. பெண்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வர பலரும் விரும்பும் நிலையில் இந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கனிமொழி கூறினார்.