பேரலை தாக்குதலில் சிக்கிய மும்பை.. புரட்டி எடுக்கிறது வரலாறு காணாத மழை
மும்பையை இன்று மாலை சுனாமி போன்ற பேரலை தாக்கப் போகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாதிப்பை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
மும்பை: மும்பையில் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எதிர்பார்த்தது போல பேரலைத் தாக்குதல் ஏற்பட்டிருப்பதால் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது.
மும்பையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது.
இந்த நிலையில், மும்பையின் சில பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
2 அடி தண்ணீர்
சாலைகளில் ஆங்காங்கே 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள 7 ஏரிகளும் 100 சதவீதம் நீரில் நிரம்பியுள்ளன. மும்பை அருகே ரயில் ஒன்று தடம்புரண்டதால் மற்ற ரயில்கள் தாமதமாக காரணமாகிவிட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை
ரயில் சேவைகள் இயக்க சிரமமான நிலையில் ரயில்களின் வருகையும், புறப்பாடும் தாமதமாகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சுனாமி போன்ற அலை
இந்நிலையில் இன்று மாலை மும்பையை சுனாமி போன்ற அளவுக்கு பேரலை தாக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தற்போது பெரும் பெரும் அலைகள் மும்பை கடலை கொந்தளிக்க வைத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. நேற்று மாலையில் அதிகபட்சமாக 3.50 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழுந்தது. அதாவது 10 அடிக்கும் மேல் அதன் எழுச்சி காணப்பட்டது. பாதிப்பை கட்டுப்படுத்த, பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தாதர், குர்லா மற்றும் பரேல் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
வெள்ளக் காடானாது
கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுனாமி போன்ற அலை தாக்கலாம் என்ற தகவலால் மக்கள் கலங்கி உள்ளனர்.