மைசூரு மகாராணி "அம்மா" ஆகிறார்.. முடிவுக்கு வந்தது 400 ஆண்டுகால "சாபம்".. மக்கள் மகிழ்ச்சி!
மைசூரு அரச வம்சத்தினரின் ராணி கர்ப்பம் தரித்துள்ள செய்தி பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் 400 ஆண்டுகால சாபம் முடிவுக்கு வந்துள்ளது என்கிறார்கள் மைசூரு மக்கள்.
மைசூரு: மைசூரு அரச வம்சத்தின் ராணி திரிஷிகா கர்ப்பம் தரித்துள்ள செய்தியால் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது.
கி.பி. 1399ம் ஆண்டு முதலாக, 1950ம் ஆண்டு வரையிலும் மைசூரு சமஸ்தானத்தை, உடையார் வம்சத்தினர் ஆட்சி செய்தனர். இந்தியாவுக்கு பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த பிறகு, மைசூரு சமஸ்தானம், இந்தியாவின் ஒருபகுதியாகச் சேர்க்கப்பட்டது.
எனினும், மைசூரு அரச வம்சம், இன்றைக்கும் உயர்வான ஒன்றாக, இந்திய அளவில் மதிக்கப்பட்டு வருகிறது. அங்கு நடக்கும் அரச விழாக்கள் உலகப் பிரசித்திப் பெற்றவை.
அதேசமயம், மைசூரு அரச வம்சத்தில் நீண்ட காலமாக நேரடி வாரிசுகள் யாரும் இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில், தத்து வாரிசாக, யதுவீர் கிருஷ்ணநந்தா சாம்ராஜ உடையார் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கேற்ப, அரசராக இருந்து வந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மரணமடைந்துவிட்டார். இதனால் யார் மைசூரு அரச வாரிசு என்பதில் குழப்பம் நிலவி வந்தது. பின்னர் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்ட நிலையில் யதுவீர் தெரிவு செய்யப்பட்டார்.
அரசரானார் யதுவீர் உடையார்
ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரைத் தொடர்ந்து, மைசூரு அரச வம்சத்தின் புதிய அரசராக, யதுவீர் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் திரிஷிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மிகப் பிரமாண்டமாக அவர்களின் திருமணம் நடைபெற்றது.
திரிஷிகா ராணியானார்
திரிஷிகா, ராணியாகவும் முடிசூட்டப்பட்டார். இந்த நிலையில் தான் அவர் தற்போது 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலமாக, மைசூர் ராஜ வம்சத்திற்கு, கடந்த 400 ஆண்டுகளாக இருந்து வந்த சாபம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜயநகரப் பேரரசு- மைசூர் அரசு போர்
ஆம், விஜயநகரப் பேரரசு மீது 1612ம் ஆண்டில் போர் தொடுத்த மைசூரு ராஜ வம்சத்தினர், திருமலை ராஜா என்ற மன்னரை மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
அலமேலம்மா சாபம்
இதனால், அவரின் மனைவி அலமேலம்மா கடும் விரக்தி அடைந்ததோடு, மைசூரு ராஜவம்சம் நேரடி வாரிசுகள் இன்றியும், மன்னர்கள் சிறு வயதிலேயே சாகும்படியும் 1612ம் ஆண்டு சாபமிட்டதாகவும் வரலாற்று தகவல் ஒன்று இன்றளவும் உலா வருகிறது.
400 ஆண்டுகளாக வாரிசுகள் இல்லை
இதற்கேற்ப, கடந்த 400 ஆண்டுகளாக, மைசூர் ராஜவம்சத்திற்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை. மன்னர்கள் வாரிசு இன்றி, இளம் வயதிலேயே உயிரிழப்பது தொடர்கதையாக இருந்தது. மேலும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளே, மன்னர் குல வாரிசுகளாகவும் அறிவிக்கப்பட்டு வந்தனர்.
முடிவுக்கு வந்த சாபம்
ஆனால், தற்போது திரிஷிகா மற்றும் யதுவீர் தம்பதியினர், ராஜ வம்சத்தின் மீதிருந்த சாபத்தை முறியடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மைசூர் மக்களிடையே நிலவுகிறது. பலரும் இந்த செய்திகளை மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர்.