2002 குஜராத் வன்முறை சம்பவங்கள் வருத்தமளிக்கிறது... எனக்கு தொடர்பில்லை: நரேந்திர மோடி
டெல்லி: குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் வருத்தமடையச் செய்தன.. அதே நேரத்தில் அந்த சம்பவங்களில் எனக்கு தொடர்பில்லை..நான் தவறு செய்யவில்லை என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆன்டி மெரினோ நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 310 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தில் ஆன்டி மெரினோ தம்மிடம் மோடி கூறியதாக பதிவு செய்துள்ள கருத்துகள்:
ராணுவம் அழைப்பு
2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி கோத்ரா ரயில் எரிப்பில் 59 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அப்போது கோத்ரா சென்றுவிட்டு காந்திநகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அன்று பின்னிரவு ராணுவத்தினரை உஷார்நிலையில் வைத்திருக்க அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டேன்.
எல்லையில் இருந்த ராணுவம்
ஆனால் நாடாளுமன்றத் தாக்குதல் நடந்த நேரம் என்பதால் எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அண்டை மாநிலங்களிடம் உதவி
இதனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய அண்டை மாநிலங்களின் துணை ராணுவப் படையை அனுப்ப கோரினேன். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 10 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்ப வேண்டினேன்.
கைவிரித்த மாநிலங்கள்..
இருந்த போதும் மகாராஷ்டிரா மாநிலம் மிகக் குறைந்த அளவிலான படையினரை அனுப்பியது. ராஜஸ்தானும் மத்திய பிரதேசமும் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.
வருத்தம்தான்..
2002ஆம் ஆண்டு குஜராத் வன்முறைகள் வருத்தமளிக்கவே செய்கிறது. ஆனால் எனக்கும் அந்த வன்முறைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு அந்த வன்முறைகளில் தொடர்பிருப்பதாக எந்த ஒரு நீதிமன்றமும் கூறவில்லை.
ராஜினாமா செய்ய விரும்பினேன்..
குஜராத் வன்முறைக்குப் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பினேன். கோவாவில் 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் எனது ராஜினாமாவை கொடுத்தேன். ஆனால் பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொண்டதால் தொடர்ந்தும் பதவியில் நீடித்தேன். குஜராத் மக்களும் நான் பதவியில் இருந்து விலகுவதை விரும்பவில்லை.
கட்சி கட்டுப்பாடு..
நான் கட்சியின் ஒழுங்கை மீற விரும்பவில்லை. என்னுடைய கட்சியை எதிர்த்து போராடவும் நான் விரும்பவில்லை. என்னுடைய தலைவர்கள் என்ன சொன்னார்களோ அதையே நான் கடைபிடித்தேன்.
ஊடகங்களுடன் மோதல்?
இந்த விவகாரத்தில் ஊடகங்கள் அவர்களது பணியைச் செய்கின்றன. அவற்றுடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அப்படி மோதிக் கொள்ள எனக்கு நேரமும் இல்லை.,
இவ்வாறு மோடி கூறியதாக அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.