சோனியா குடும்பம் பற்றி கூடுதல் தகவல்களுடன்... அடுத்த புத்தகம் எழுதுகிறார் நட்வர் சிங்!
டெல்லி: ஒரு வாழ்க்கைப் போதாது என்ற தன் சுயசரிதை நூலால் பரபரப்பைக் கிளப்பிய வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் நட்வர் சிங், தற்போது அடுத்த புத்தகம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார். முந்தையப் புத்தகத்தை விட தனது புதிய புத்தகத்தில் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றிக் கூடுதல் தகவல்கள் இடம் பெற்றிருக்கும் என அவர் தெரிவித்துள்ளது, அப்புத்தகம் மீதான எதிர்பார்ப்பை தற்போதே எகிற வைத்துள்ளது.
காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக கருதப்பட்டவர் 83 வயது நட்வர் சிங். இவர் கடந்த 2008-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு வெளியேறினார். இவர், ‘ஒரு வாழ்க்கை போதாது' என்ற தலைப்பில் தனது சுய சரிதையை நூலாக எழுதி வெளியிட்டார்.
அந்தப் புத்தகத்தில் 2004ம் ஆண்டு சோனியா பிரதமராவதை ராகுல் தடுத்தார் என்ற பரபரப்பான குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார். மேலும், ராஜீவ் படுகொலை குறித்தும் பல பரபரப்பான தகவல்களை அவர் வெளியிட்டிருந்தார்.
கண்டனம்...
நட்வர்சிங்கின் கருத்துக்களுக்கு காங்கிரஸ் தனது கண்டனத்தை தெரிவித்தது. தானும் சுயசரிதை எழுதப் போவதாகவும், அதில் உண்மைகளை மட்டும் கூறப்போவதாகவும் சோனியா பதிலடி கொடுத்தார்.
இரண்டாம் பாகம்...
இந்தப் பரபரப்புகளே இன்னும் அடங்காத நிலையில், தனது சுயசரிதையிம் இரண்டாம் பாகம் எழுதப் போவதாக தெரிவித்துள்ளார் நட்வர் சிங்.
மை இர்ரெகுலர் டைரி...
இது குறித்து பி.டி.ஐ.க்கு நேற்று அவர் அளித்த பேட்டியில், "நான் புதிதாக எழுதவுள்ள புத்தகத்துக்கு "மை இர்ரெகுலர் டைரி' என்று பெயரிட்டுள்ளேன். இப்புத்தகம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.
கூடுதல் தகவல்கள்...
மேலும், அந்தப் புத்தகத்தில் சோனியா காந்தியின் குடும்பத்தைப் பற்றியும், அவரது தலைமையின் கீழ் காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்தும் மேலும் தகவல்கள் இருக்குமா? என்ற கேள்விக்கு, "அந்தப் புத்தகம் இன்னமும் அதிகமான தகவல்களைப் வெளிப்படுத்தும்' என்று நட்வர் சிங் பதிலளித்தார்.