88 ஆயிரத்தில் எத்தனை பேரின் மருத்துவ கனவு நனவாகுமோ? பதைபதைப்பில் நீட் மாணவர்கள்
டெல்லி: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏழை, கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்களின் கனவுகள் என்னவாகுமோ என்ற அச்சத்தில் மாணவர்கள் காத்து கிடக்கின்றனர்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு ஒரே மாதிரியான சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதால் தேசிய தகுதிகாண தேர்வு எனப்படும் நீட் தேர்வை இந்த ஆண்டில் மத்திய அரசு கட்டாயமாக்கியது.
இதனால் மருத்துவர் கனவில் உள்ள ஏழை, கிராமப்புற மாணவர்களின் ஆசை நிராசையாகிவிடும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சென்றுள்ளது.

மே 7-இல் தேர்வு
இதனிடையே கடந்த மே 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் 18.34 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகம் மற்றும் புதுவையில் 88,000 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வு முடிவுகளுக்கு தடை
இதன் முடிவுகள் ஜூன் 8-ஆம் தேதி வெளியிடப்படும் என்ற நிலையில் பிறமொழிகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களில் பாரபட்சம் இருந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜூன் 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட தடை விதித்தார்.

சிபிஎஸ்இ மேல்முறையீடு
இதை எதிர்த்து சிபிஎஸ்இ வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த மனுவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் இன்னும் 2 நாள்களில் தேர்வு முடிவுகளை வெளியிட ஏதுவாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தனர்.

தடை நீக்கம்
இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கினர். மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை சிபிஎஸ்இ வாரியமே முடிவு செய்து கொள்ளலாம் என்றனர்.

முடிவுகள் எப்போது?
உச்சநீதிமன்றத்தின் அனுமதியை தொடர்ந்து சில பணிகள் இருப்பதால் தேர்வு முடிவுகள் 2 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது. இதை வைத்து பார்க்கும்போது நீட் முடிவுகள் ஜூன் 26-ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்பிருக்கலாம் என்று தெரிகிறது.

கனவு என்னவாகுமோ?
நீட் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரியும், வினாத்தாளில் பாரபட்சத்தால் நீட் தேர்வை மறுமுறை நடத்தக் கோரியும் மாணவர்கள், பெற்றோர்கள் என வழக்கு தொடர்ந்த வண்ணம் இருந்தனர். தற்போது நீட் முடிவுகள் வெளியிட தடை நீக்கப்பட்டதால் தமிழகம், புதுவையில் தேர்வு எழுதிய 88 ஆயிரம் பேரில் எத்தனை பேரின் மருத்துவ கனவு, லட்சியம், ஆசை நிறைவேறுமோ என்று படபடப்புடன் இன்னும் 2 வாரங்களுக்கு காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications