'நீட்' தேர்வை கட்டாயமாக்கியது மத்திய அரசு… தமிழ் உள்பட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்
நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசு தமிழ் உள்பட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று அறிவித்துள்ளது.
டெல்லி: 'நீட்' என்று சொல்லக் கூடிய அகில இந்திய மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்பட 8 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வினை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்தத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தப்பட முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, இந்தியா முழுவதும் 2017-18 முதல் நீட் நுழைவுத் தேர்வினை கட்டாயமாக்கி அறிவிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. இதனால், கடந்த ஆண்டு நீட் தேர்வு இல்லாமல் மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு மொழிகள் பேசும் இந்தியாவில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் கேள்வி கேட்கப்படும் என்பதால், மாநில மொழிகளில் படித்த மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், பல்வேறு மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, மத்திய அரசு தமிழ், ஆங்கிலம், வங்காளம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, ஹந்தி, அஸ்ஸாமி ஆகிய 8 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
ஆக, இனி நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றால்தான் மாணவர்களால் மருத்துவப் படிப்பை எட்ட முடியும். இதனால் கடந்த ஆண்டு வரை பனிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்ந்த முறை மாறியுள்ளது. இந்த ஆண்டில் இருந்து மாணவர்கள் பன்ரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் கடுமையான சூழலில் நீட் தேர்வுக்கும் தயாராக வேண்டிய சூழலை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.