நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.. இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்! ராஜ்நாத் சிங் ஆவேசம்
நொய்டா: இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு திட்டமிட்டு மறைக்கப்பட்டிருப்பதாகவும் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.
சுபாஷ் சந்திரபோஸுக்கு உரிய மரியாதையை பிரதமர் நரேந்திர தலைமையிலான பாஜக மட்டுமே செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாகவே, காங்கிரஸுக்கு எதிரான சித்தாந்த ரீதியிலான அரசியல் போரை அக்கட்சி தொடங்கிவிட்டது. என்னதான் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் பெரும்பாலான இந்திய மக்கள் பாரத நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மீது அன்பு வைத்திருப்பது பாஜகவுக்கு நெருடலாக இருந்தது.
பாகிஸ்தான் பிரதமர் பாபர் அசாம்.. 1992 லாஜிக்! உலகக்கோப்பை வென்றால்.. கொளுத்திப்போட்ட சுனில் கவாஸ்கர்
நேருவுக்கு எதிரான அரசியல்..
இதனால், நேருவை பல விவகாரங்களில் குற்றம்சாட்ட தொடங்கியது பாஜக. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, காஷ்மீர் பிரிவினை என அனைத்துக்கும் நேருதான் காரணம் எனக் கூறியது. மேலும், நேருவுக்கு மாற்றாக வல்லபபாய் படேல், சாவர்க்கர் ஆகிய தலைவர்களை பாஜக தூக்கிப் பிடித்தது. இதன் ஒருபகுதியாகவே, குஜராத்தில் வல்லபபாய் படேலுக்கு பிரம்மாண்ட் சிலையை பாஜக அரசு வைத்தது.
"சுபாஷ் சந்திரபோஸ் முதல் பிரதமர்.."
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று நடைபெற்ற தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது: இன்றைய தலைமுறை மாணவர்கள் அனைவரும், சுதந்திரப் போராட்டத் தலைவர்களை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதில் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்தான். இதை கூறுவதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1943-ம் ஆண்டு 'ஆசாத் ஹிந்த்' என்ற பெயரில் இந்திய அரசாங்கத்தை நிறுவி தன்னை பிரதமராக பிரகடனப்படுத்திக் கொண்ட தைரியசாலி இவர். இந்த வரலாறு இன்றைய மாணவர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?
"வேண்டுமென்றே இருட்டடிப்பு.."
சுபாஷ் சந்திரபோஸ் என்றால் அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்பது மட்டுமே மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே இந்திய அரசாங்கத்தை சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிய விஷயம் ஏன் பலருக்கு தெரிவதில்லை? அரசாங்கம் என்றால் வெறும் ஒப்புக்கான அரசாங்கமாக சுபாஷ் சந்திரபோஸின் ஆசாத் ஹிந்த் அரசு இருக்கவில்லை. பிரிட்டஷ் அரசின் கண்களின் அது விரலை விட்டு ஆட்டியது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக உளவுப்படையும் அவரது அரசின் கீழ் செயல்பட்டது. மிகக்குறைந்த வளங்களை கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நேருக்கு நேர் எதிர்த்த உலகின் முதல் நபர் சுபாஷ் சந்திரபோஸ் மட்டுமே. ஆனால் அவரது சாதனைகளும், பங்களிப்பும் வேண்டுமென்றே சிலரால் இருட்டடிப்பு செய்யப்படுகின்றனர்.
"வரலாற்றை திருத்தி எழுதுவோம்.."
சுதந்திர இந்தியாவிலேயே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு மிகவும் மதிப்புக் கொடுத்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுதான். சுபாஷ் சந்திரபோஸ் தொடர்புடைய 300 ரகசிய ஆவணங்களை பாஜக அரசுதான் மக்கள் பார்வைக்கு வெளியிட்டது. அவரது சுதந்திரப் போராட்ட பங்களிப்பையும், அவரது தொலைநோக்கு சிந்தனையையும் இன்றைய இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காக, சுபாஷ் சந்திரபோஸை மறு மதிப்பீடு செய்ய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும். சிலர் இதனை வரலாற்றை திருப்பி எழுதும் நடவடிக்கை எனக் கூறலாம். ஆனால், வரலாற்றை நாங்கள் திருப்பி எழுதவில்லை; மாறாக, திருத்தி எழுதுகிறோம் என நான் கூறுவேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.