தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைவர் சரத்குமாரின் பதவிக்காலம் நீட்டிப்பு
டெல்லி: தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைவர் சரத்குமாரின் பதவிக்காலம் ஒப்பந்த அடிப்படையில் மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சரத்குமார். அவர் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரின் பதவிக்காலம் சனிக்கிழமையுடன் நிறைவடையவிருந்தது. இந்நிலையில் அவரின் பதவிக்காலத்தை ஒப்பந்த அடிப்படையில் மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாலேகாவ்ன், சம்ஜாவ்தா குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை ஏற்கனவே தாமதமாகியுள்ள நிலையில் குமார் ஓய்வு பெற்றால் மேலும் சிக்கல் ஆகிவிடும் என்பதால் அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் தான் மாலேகாவ்ன், சம்ஜாவ்தா வழக்குகளை கவனித்து வருவதால் அவர் அந்த பதவியில் தொடர்ந்து நீட்டிப்பது நல்லது என்று கருதப்படுகிறது.
அவருக்கு தான் அந்த வழக்குகளின் விபரங்கள் அனைத்தும் நன்கு தெரியும் என்பதால் அவர் தலைமையில் விசாரணை நடத்தினால் அது தாமதமாகாது என்று நம்பப்படுகிறது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைமை இயக்குனர் சரத்குமார், மறு பணியமர்த்தல் ஒப்பந்த அடிப்படையில் மேலும் ஓராண்டுக்கு தனது பதவியில் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications