மனைவிகளை அடிக்கும் ஆண்களை சும்மா விடமாட்டேன்: நிர்மலா சீதாராமன் சூளுரை
ஹைதராபாத்: மனைவிகளை அடித்து உதைத்து சித்ரவதைப் படுத்தும் ஆண்களைச் சும்மா விட மாட்டேன் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
எம்.பிக்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்தின்கீழ், ஆந்திராவின், மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள துர்ப்பிதாலு மற்றும் வானிகலங்கா கிராமங்களை தத்து எடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
இதையொட்டி அந்த கிராமத்துக்குச் சென்ற நிர்மலா சீதாராமன், தன்னுடைய கணவரும் ஆந்திர அரசு ஆலோசகருமான பரகால பிரபாகருடன் அந்தக் கிராமத்தை தூய்மை செய்தார். கிராம மக்கள் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், மது குடித்துவிட்டு வரும் ஆண்கள் அவர்களது மனைவியை அடித்து உதைக்கும் கொடுமைகள் இன்றும் நடக்கிறது. இதனை நானே பார்த்து உள்ளேன். இனி அப்படி செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். அவர்களுக்கு எதிராக நானே போராட்டம் நடத்துவேன்.
இந்த கிராமத்தில் ஒரு சமுதாய கூடம் அமைக்கப்பட உள்ளது. அதில் பெண்கள் அவ்வப் போது கூடி தங்களது கஷ்டங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். கணவர் உங்களை அடித்தால் நீங்கள் இந்த சமுதாய கூடத்திலேயே தங்கி விட வேண்டும். உங்கள் கணவர் வருத்தம் தெரிவிக்கும் வரை வீட்டுக்கு செல்லக்கூடாது. இந்தச் சமுதாய கூடத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்படும். 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.