மோடி அரசின் அதிரடி.. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை: நிர்மலா சீதாராமன்
டெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதிஇல்லை என வர்த்தக துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வர்த்தக துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் நேற்று தமது அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிப்பதில்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அப்படி சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
இந்த விஷயத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி நடப்போம். ஏற்றுமதியை அதிகரிப்பது என்பது முதன்மை கொள்கையாக இருக்கும். அனைத்து நாடுகளுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.