ஏர் இந்தியா விமானத்தில் ஏசி கோளாறு... பேப்பரால் விசிறியபடி பயணம்
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இயந்திரம் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து மூச்சுவிட சிரமப்பட்ட பயணிகள் தங்களிடம் இருந்த பேப்பர் கொண்டு விசிறியபடி பயணம் செய்தனர்.
டெல்லி: மேற்கு வங்கத்தின் பக்டோக்ராவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இயந்திரம் சரிவர வேலை செய்யாததால், காற்று வசதி இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் பக்டோக்ராவில் இருந்து ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் நேற்று டெல்லி புறப்பட்டது. அதில் 168 பயணிகள் பயணம் செய்தனர்.
அப்போது விமானத்தில் இருந்த ஏசி இயந்திரம் சரி வர வேலை செய்யாததால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து விமானத்தில் உள்ள பணியாளர்களிடம் கூறியபோது அவர்கள் விரைவில் சரியாகிவிடும் என்ற பயணிகளை சமாதானப்படுத்தினர்.
எனினும் ஏசி இயந்திரம் சரிசெய்யப்படவில்லை. இதனால் பயணிகள் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டனர். சில பயணிகளுக்கு ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டது. எனினும் அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
இதனால் தங்களிடம் இருந்த விளம்பர பேப்பர்கள், நாளிதழ்கள் ஆகியவற்றைக் கொண்டு விசிறியபடி பயணம் செய்தனர். ஏர் இந்தியா விமான போக்குவரத்துத் துறையின் அலட்சியத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார். ஏர் இந்தியா தனியார்வசம் ஒப்படைக்கும் முயற்சி நல்ல முயற்சி என்றும் பயணிகள் தெரிவித்தனர்.