இரட்டை இலைக்கு லஞ்சம்- டிடிவி தினகரன் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை: டெல்லி போலீஸ் திட்டவட்டம்
டெல்லி: இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என டெல்லி போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் டிடிவி தினகரன் என்பது வழக்கு. இந்த வழக்கில் தினகரன், புரோக்கர் சுகேஷ், தினகரன் நண்பர் மல்லி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

டிடிவி தினகரன் டெல்லி திஹார் சிறையில் 30 நாட்களுக்கு மேல் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் சேர்க்கப்படவில்லை என தகவல் பரவியது.
ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்த டெல்லி போலீஸ் இணை ஆணையர் பிரவீன் ரஞ்சன், இந்த வழக்கில் இன்னமும் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது டிடிவி தினகரனின் புரோக்கர் சுகேஷ் மீது மட்டும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் குற்றமற்றவர் என நாங்கள் கூறவில்லை. தினகரன் உள்ளிட்ட 4 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications