தெலுங்கானா உருவானால் காங்கிரஸ் அழியும்: ஆந்திர முதல்வர் கிரண்குமார் எச்சரிக்கை!
தெலுங்கானா குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு கிரண்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தெலுங்கானா அமைப்பதால் ஆந்திரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சரி செய்ய முடியாத பின்னடைவு ஏற்படும். ஆந்திரத்தை இரண்டாகப் பிரிப்பதினால் ஏற்படும் பிரச்னைகளை பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் புரிந்து கொள்ளவில்லை.
ஆந்திராவை பிரிக்க காங்கிரஸ் கட்சியின் தீவிரமான தொண்டர்களாகிய நாங்கள் ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறோம் என்று அவர்கள் உணரவில்லை. மாநில சட்டசபையில் நிராகரித்த பின்னரும் தெலுங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கோருவது துரதிருஷ்டவசமானது.
ஆந்திரா இரண்டாகப் பிரிப்பதைத் தடுக்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது உள்ளிட்ட எந்த தியாகத்தையும் செய்வேன். தனிப்பட்ட நபரை விட கட்சி பெரியது; ஆனால், கட்சியை விட மக்களின் நலனே முக்கியம்.
ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்தால் இரு பகுதி மக்களும் மின்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் கடும் பாதிப்பைச் சந்திப்பர். அதனாலேயே எதிர்க்கிறோம்.
ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி தனிக் கட்சி தொடங்குது பற்றி முடிவெடுப்போம்.
இவ்வாறு கிரண்குமார் ரெட்டி கூறினார்.