உஷார் மக்களே.. பொருளாதார சீர்திருத்தம் தொடரப்போகுதாம்.. அருண் ஜெட்லி பேச்சால் பரபரப்பு
மும்பை: பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில், பொருளாதார பத்திரிகையொன்று நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜெட்லி பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஜெட்லி பேசியதாவது:
பொருளாதார சீர்திருத்த பாதையில் அரசு தொடர்ந்து பயணிக்க உள்ளது. நாம், அடிப்படை கட்டமைப்பை மாற்ற இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது.
என்ட் கார்டே கிடையாது
சில நேரங்களில் சீர்திருத்தங்களின் வேகம் குறைவாக இருக்கலாம். ஆனால் நமது பாதை தெளிவானது. இதில் முடிவு என்பது கிடையாது. இது ஒரு பயணம். ஜிஎஸ்டியால் அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது.
வங்கி அமைப்பு
ஒரு கட்டத்தில் நமது வங்கிகள் மிக அதிக அளவுக்கு கடன்களை வழங்கியபடி இருந்தன. 2015ம் ஆண்டு வாக்கில்தான், வாராக்கடன்கள் அவர்களுக்கு அச்சுறுத்துவதாக மாறியது. நமது வங்கி அமைப்பு வெளிப்படையாக இருந்தால்தான் பொருளாதாரத்தில் வலிமையாக இருக்க முடியும்.
பொருளாதார பலம்
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வங்கிகளின் ஊக்கத்திற்கு அதிக நிதி ஒதுக்கியது போன்ற தைரியமான முடிவுகள் இந்திய பொருளாதாரத்தை மேலும் வலுவாக்கும். எனவே இந்த விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விமர்சனங்கள்
சுனாமியைவிட, பண மதிப்பிழப்பு மோசமானது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் யஷ்வந்த் சின்ஹாவும் பொருளாதார நடவடிக்கைகளை விமர்சனம் செய்திருந்தார். ஆனால் பொருளாதார சீர் திருத்தம் தொடரும் என்று ஜெட்லி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.