பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டது ஆர்.பி.ஐ அதிகாரிகளும்தான்.. எப்படி தெரியுமா?
பணமதிப்பு செய்யப்பட்டதால் திரும்ப பெறப்பட்ட ரூபாய் தாள்களை எண்ணும் பணி இருப்பதால் ஆர்பிஐ ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் தாள்களை எண்ணும் பணி இருப்பதால் ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் சிங் படேல் கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி கறுப்புப் பணம் மற்றும் தீவிரவாதிகளிடையேயான பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவித்தார். இதனால் ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய பொருளாதார பாதிப்பை இந்தியா சந்தித்தது.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்று சொன்னாலும் இதுவரை எவ்வளவு கறுப்புப் பணம் எமுடக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிதித்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடந்தது.
எவ்வளவு பழைய ரூபாய் தாள்கள்?
இந்த கூட்டத்தில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி ஆளுநர் படேல், எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 8, 2016ன் படி நாட்டில் ரூ.17.7 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. அது இப்போது ரூ.15.4 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது.
மெஷின் கொண்டு எண்ணப்படுகிறது
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட அன்று, 17 ஆயிரத்து 165 மில்லியன் ரூ.500 தாள்களும், 6 ஆயிரத்து 858 மில்லியன் ரூ.1000 நோட்டுகளும் புழக்கத்தில் இருந்ததாக எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது. ஆர்பிஐ ஊழியர்கள் பணமதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்காக 39 பணம் எண்ணும் மெஷின்கள், மற்றும் வாடகைக்கு சில மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விடுமுறையின்றி பணி
சில மெஷின்கள் நோட்டுகளை எண்ண நேரமெடுப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மேலும் பல மெஷின்களை வாங்கி நோட்டுகளை எண்ணும் பணியை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக படேல் கூறியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் ஞாயிற்றுக் கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் முழு நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
2019க்குள் சொல்லிடுவீங்களா?
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமார் மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் எப்போது தான் எவ்வளவு ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்ற விவரத்தை ஆர்பிஐ வெளியிடும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார். என்ன தோராயமாக பிரதமர் மோடி அரசு 2019 மே மாதத்தில் முடிவிற்கு வரும் முன்னர் கூறி விடுவார்களா என்றும் அவர் கிண்டல் செய்துள்ளார்.