இருக்கு.. சசிகலாவுக்கு சலுகை வழங்கியதற்கு ஆதாரம் இருக்கு.. அடித்து சொல்லும் டிஐஜி ரூபா!
சிறையில் சசிகலாவுக்கு சலுகை வழங்கியதற்கு ஆதாரம் இருக்கிறது என்று கர்நாடக சிறைத் துறை டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகை வழங்கியதற்கு ஆதாரம் இருக்கிறது என்று டிஐஜி ரூபா கருத்து வெளியிட்டுள்ளார்.
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சிறைத் துறை டிஐஜி ரூபா ஆய்வு மேற்கொண்டார். அப்போது சசிகலா அறையில் நடத்திய ஆய்வில் அங்கு அவருக்கு தனி சமையலறை இருப்பதை கண்டறிந்தார். மேலும் பெண் கைதி ஒருவரை சமையல்காரராக பயன்படுத்தி வருகிறார் என்பதையும் கண்டறிந்தார்.
சிறையில் சசிகலாவுக்கு விஐபி உபசரிப்பு வழங்க அவரிடம் இருந்து சிறை துறை அதிகாரிகளும், சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவும் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக மாநில டிஜிபி தத்தாவுக்கு ரூபா அறிக்கை அனுப்பியுள்ளார்.
சிறைத் துறை டிஜிபி மறுப்பு
தன் மீதான குற்றச்சாட்டுகளை சிறைத் துறை டிஜிபி ராவ் மறுத்துள்ளார். மேலும் ரூபாவின் பணிகளில் தான் தலையிட்டதால் தன் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார் என்றும், ரூபா அளித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் ராவ் தெரிவித்துள்ளார்.
விரிவாக பேசமுடியாது
இந்தநிலையில் பரபரப்பு குற்றம்சாட்டிய ரூபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் சமர்ப்பித்த அறிக்கை குறித்து என்னால் விரிவாக பேசமுடியாது. அந்த அறிக்கையை என்னுடைய உயர் அதிகாரியான மாநில டிஜிபிக்கு அனுப்பியுள்ளேன். என்னுடைய அறிக்கை அரசு குறித்தோ, உயரதிகாரிகள் குறித்தோ, சிறைத் துறை குறித்தோ அளிக்கப்பட்ட புகார் அல்ல. இது முழுக்க முழுக்க ஒரு அறிக்கையே. சிறையில் ஆய்வு செய்து நான் கண்டறிந்ததை டிஜிபிக்கு புகாராக அனுப்பியுள்ளேன்.
உண்மைகளை புகாராக...
சிறை துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக சிறையில் எழுந்த வதந்திகள் குறித்தும், நான் கண்ட உண்மைகள் குறித்தும் புகாராக அனுப்பியுள்ளேன். என்னுடைய அறிக்கையில் வதந்தியை நான் உண்மை என்று அடித்து சொல்லவில்லை. சிறையில் இதுபோன்ற வதந்திகள் பரவுகிறது என்றும், குறிப்பிட்ட சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும் இதில் டிஜிபி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கை அனுப்பியுள்ளேன்.
சசிகலா அறையில் சமையலறை
சசிகலா அறையில் சமையலறை உள்ளதை நானே பார்த்தேன். வேறு ஒருவர் அளித்த தகவலின் பேரில் புகார் அளிக்கவில்லை. சமையலறை இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நான் அளித்த அறிக்கையில் தவறிருந்தால் அதுகுறித்து விசாரணையை சந்திக்க தயார்.
சதி ஏதும் இல்லை
சிறைத் துறை இயக்குநர் சத்தியநாராயண ராவுக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதும் இல்லை. உரிய விசாரணைக்கு பிறகே சசிகலா விவகாரம் குறித்து டிஜிபி தத்தாவுக்கு புகார் அனுப்பினேன். சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நான் பணிக்கு சேரும்போது சிறைத் துறையும் காவல் துறையும் தனித்தனி துறைகள் என்று டிஜிபிதான் என்னிடம் கூறினார். அதனால் டிஜிபி, ஐஜி அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க தேவையில்லை என்று அவர் எனக்கு உத்தரவுவிட்டிருந்தார்.
முதல்வர் கூட்டத்தில்....
அதனால் முதல்வருடன் நிகழ்ந்த கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. எனக்கு அழைப்பில்லாததால் நான் பங்கேற்கவில்லை. எனினும் டிஜிபி எனக்கு மெமோ அளித்தார். நான் ஊழல் அதிகாரி என்றும் என் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது என்றும் டிஜிபி கூறியதில் உண்மையில்லை. இணையதளத்தில் என்னை குறித்து தகவல்களை தேடுங்கள். என் மீது ஒரு குற்றச்சாட்டாவது பதிவாகியுள்ளதா, என்னிடம் ஊழல் குறித்து விசாரணை ஏதும் நடைபெற்றுள்ளதா என்பது அப்போது தெரியும் என்றார் ரூபா.