1000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை: சக்திகாந்த் தாஸ் திட்டவட்டம்
1000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை. 500 ரூபாய் மற்றும் அதற்கும் குறைவான முகமதிப்புள்ள ரூபாய்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதிலேயே கவனமாக உள்ளோம் என சக்திகாந்த் தாஸ் கூறியுள்ளார்.
டெல்லி: ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திலிருந்து அகற்றப்படுவதாக பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதன்பிறகு புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அமலுக்கு வந்துள்ளன. புதிதாக 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், 1000 ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் விரைவில் மீண்டும் அறிமுகமாக உள்ளதாக சில முன்னணி ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் சக்திகாந்தாஸ் இதை மறுத்துள்ளார். டிவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது: 1000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை. 500 ரூபாய் மற்றும் அதற்கும் குறைவான முகமதிப்புள்ள ரூபாய்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதிலேயே கவனமாக உள்ளோம்.
No plans to introduce ₹1000 notes. Focus is on production and supply of ₹500 and lower denomination notes.
— Shaktikanta Das (@DasShaktikanta) February 22, 2017
ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை இருப்பதாக கூறப்பட்டு வந்த புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. அனைவருமே தேவைப்படும் அளவுக்கு மட்டும் பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகப்படியாக பணத்தை எடுப்பது பிறருக்கு சங்கடத்தை கொடுக்கும். இவ்வாறு சக்திகாந்தாஸ் கூறியுள்ளார்.