'மால்களுக்கு' இரவு 10 மணிக்கு மேல் கரண்ட் கிடையாது.. டெல்லி கவர்னர்
டெல்லி: டெல்லியில் இரவு 10 மணிக்கு மேல் ஷாப்பிங் மால்களுக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கூறியுள்ளார்.
டெல்லியில் தற்போது மின் பற்றாக்குறை தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது. இதையடுத்து மின் நெருக்கடியைக் குறைக்க அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார் ஆளுநர் ஜங்.
கூட்டத்தின்போது அவர் பல கட்டுப்பாடுகளையும் அதிகாரிகளுக்கு பிறப்பித்தார். அன்படி ஷாப்பிங் மால்களுக்கு இரவு 10 மணி வரை மட்டுமே மின்விநியோகம் செய்யப்பட வேண்டும்.
டெல்லி தலைமைச் செயலகம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை அனைத்து ஏசி மெஷின்களையும் ஆப் செய்து விட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், மின்துறை முதன்மைச் செயலாளர், டெல்லி டிரான்ஸ்கோ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் தற்போது கோடைகாலம் உச்சத்தில் உள்ளது. கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து கடும் மின் தடையும் ஏற்பட்டு வருகிறது.