சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் கிடையாது - கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு எவ்வித சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார்.
பெங்களூரு: பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விதிமுறையை மீறி, தொடர்ந்து சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவலை உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மறுத்துள்ளார்.
சாதாரண கைதிகளைப் போலவே சசிகலா நடத்தப்படுவதாகவும், வருமான வரி செலுத்துவதால் சசிகலாவுக்கு சிறையில் டிவி, ஃபேன், கட்டில் உள்ளிட்ட சில வசதிகள் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு அறை, சிறப்பு உணவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. இதற்காக அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி வரை லஞ்சம் கொடுத்திருப்பதாக தெரிகிறதுஎன புகார் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டது.

சசிகலாவிற்கு என்ன சலுகை
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி, சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டு பெற்றுள்ளார்.
இது தொடர்பாக நரசிம்ம மூர்த்தி கூறும்போது, சிறை விதிமுறைகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்டனை கைதிகள் பார்வையாளர்களை சந்திக்க முடியும்.

பார்வையாளர்கள் சந்திப்பு
நெருங்கிய உறவினர்கள் என்றால் ஒரு சந்திப்பில் 4 முதல் 6 பேர் வரை கைதியை சந்திக்கலாம். ஆனால் சிறை அதிகாரிகள் விதிமுறைக்கு எதிராக, அதிக பார்வையாளர்கள் சசிகலாவை சந்திக்க அனுமதித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் தேதி டிடிவி தினகரன், வெங்கடேஷ், பழனிவேலு உள்ளிட்ட 6 பேர் சந்தித்துள்ளனர். அடுத்ததாக ஜூலை 11ஆம்தேதி இளவரசியின் மகன் விவேக், மகள் ஷகிலா உள்ளிட்ட 7 பேர் சந்தித்துள்ளனர்.

விதிமுறைகள் மீறல்
இதேபோல கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சசிகலாவை சந்தித்துள்ளார். சிறைமுறையின்படி மாலை 5 மணிக்கு மேல் பார்வையாளர்கள் கைதிகளிடம் பேச முடியாது. ஆனால் புகழேந்தி சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.

சலுகை தொடர்கிறது
சசிகலா சிறையில் உள்ள அங்காடியில் பற்பசை, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட எந்த பொருட்களும் வாங்கவில்லை. இதன்மூலம் சசிகலாவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வெளியில் இருந்து கொண்டு செல்லப்படுவது தெரியவந்துள்ளது. முன்னாள் டிஐஜி ரூபாவின் புகாருக்கு பிறகும், தொடரும் சிறப்பு சலுகைகளை கர்நாடக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

ராமலிங்க ரெட்டி ஆய்வு
புதிய உள்துறை அமைச்சரான பிறகு முதல் முறையாக பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் ஆய்வு நடத்தினார், ராமலிங்க ரெட்டி. அப்போது சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெண்கள் பகுதிக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சலுகைகள் கிடையாது
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, நான் அக்ரஹாரா மத்திய சிறையில் நேரில் ஆய்வு செய்தேன். சசிகலாவுக்கோ, இளவரசிக்கோ சிறையில் எவ்வித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. மற்ற கைதிகளைப் போல சசிகலாவும் சாதாரணமாகவே நடத்தப்படுகிறார் என்று கூறினார்.

என்ன வேலைகள்
சிறையில், சசிகலாவுக்கு வேலைகள் எதுவும் வழங்கப்படுகிறதா என்பது குறித்து நான் ஆய்வு மேற்கொள்ளவில்லை. சிறையில் அவருக்கு வேலைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தால், அவர்களுக்கு வேலைகள் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

வருமான வரி
அதிமுக பொதுச்செயலாளராக இருந்ததாலும், வருமான வரி செலுத்துவதாலும் சசிகலாவுக்கு சிறையில் டிவி, ஃபேன், கட்டில் உள்ளிட்ட சில வசதிகள் வழங்கப்பட்டன. அதிமுக சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், சிறையில் வழங்கப்பட்ட சலுகைகள் பறிபோகுமா என்ற கேள்வி எழுந்தது. சசிகலா வருமான வரி செலுத்துவதால், அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடரும் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications