மருத்துவ நுழைவு தேர்வு ரத்து இல்லை.. திட்டமிட்டபடி ஜூலை 24 ல் நடைபெறும்: ஜே.பி.நட்டா விளக்கம்
டெல்லி: தேசிய மருத்துவ நுழைவு தேர்வை இந்த ஆண்டு ஒத்திவைக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் திட்டமிட்டபடி வரும் ஜூன் 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்வு நடைபெறும் எனவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய நுழைவு தேர்வு மூலமே (என்.இ.இ.டி.) மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்து இருந்தது.

மாநில அளவிலான நுழைவு தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து இருந்தது. தேசிய மருத்துவ நுழைவு தேர்வை 2 கட்டமாக நடத்த உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல்கட்ட தேர்வு நடந்தது. 6.5 லட்சம் மாணவ- மாணவிகள் இதை எழுதினார்கள். 2வது கட்ட தேசிய நுழைவு தேர்வு ஜூலை 24ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்கள் தேசிய மருத்துவ நுழைவு தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. இதைத் தொடர்ந்து மாநில அளவிலான நுழைவு தேர்வுகளையே இந்த ஆண்டு நடத்தும் வகையில் தேசிய அளவிலான தேர்வை ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று இன்று செய்திகள் வெளியாயின.
இதற்கான அவசர சட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், இச்செய்தி அடிப்படை ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, யுஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், திட்டமிட்டப்படி ஜூலை 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட பொது நுழைவுத் தேர்வு நடைபெறும். நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கும் எண்ணம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை.
அகில இந்திய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு சிறப்பு சட்டம் கொண்டு வர இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது. அந்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது. திட்டமிட்டபடி 2ம் கட்ட தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications