ராம் ரஹிம் நடித்த 'எம்எஸ்ஜி-2' படம் திரையிட தடை.. பஞ்சாப்பில் கலவரம்! ரயில் சேவை பாதிப்பு
சண்டிகர்: மெசேஜ்ஜர் ஆப் காட்-2 திரைப்படத்தை திரையிட பஞ்சாப் மாநில அரசு ரகசிய தடை விதித்துள்ளதாக குற்றம்சாட்டி, தேரா சச்சா சவுதா அமைப்பின் தொண்டர்கள் சாலை மற்றும் ரயில் மறியல்களில் ஈடுபட்டதால் பஞ்சாப்பில் பதற்றம் நிலவியது.
சீக்கியர்களில் ஒரு பிரிவாக கூறி இயங்கிவருகிறது தேரா சச்சா சவுதா அமைப்பு. இதன் தலைவரும், ஆன்மீகவாதியுமான குர்மீத் ராம் ரஹிம் சிங் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த மெசேஞ்சர் ஆப் காட் திரைப்படத்திற்கு சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த படத்தில் தன்னை தெய்வத்தின் தூதுவர் என்று குர்மீத் ராம் ரஹிம் சிங் காண்பித்துக்கொள்வதாக கூறி சீக்கியர்கள் எதிர்த்ததால் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மெசேஞ்சர் ஆப் காட் படத்தின் 2வது பாகம் இன்று ரீலீஸ் ஆகியுள்ளது. படத்தில் ஆட்சேபிக்கத்தக்க வகையில் காட்சிகள் இருக்கிறதா என்பதை பார்த்து உறுதி செய்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிவிக்கப்படும் என்று சீக்கிய அமைப்புகள் கூறியுள்ளன. இருப்பினும் பஞ்சாப்பின் பல மாவட்டங்களில் படம் இன்று திரையிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த குர்மீத் ராம் ரஹிமின் தொண்டர்களும், நலம் விரும்பிகளும், பஞ்சாப் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கியுள்ளனர். சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பஞ்சாப்பில் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
மாநில அரசு நேரடியாக படத்துக்கு தடை விதிக்காமல், மாவட்ட நிர்வாகங்கள் மூலம், படத்தை திரையிடச் செய்யாமல் தடுத்துள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இப்போராட்டத்தால் பஞ்சாப்பில் பரபரப்பு நிலவிவருகிறது.