மகதாயி நதிநீர் பிரச்சனை: பாஜகவுக்கு எதிராக கர்நாடகா விவசாயிகள் போர்க்கோலம்- இன்று முழு அடைப்பு!
மகதாயி நதிநீர் பிரச்சனையில் வசமாக மாட்டிக் கொண்டது பாஜக. பாஜகவுக்கு எதிராக அணி திரண்டுள்ள கர்நாடகா விவசாயிகள் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.
Recommended Video

பெங்களூரு: மகதாயி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறி தங்களை ஏமாற்றிய பாஜகவை கண்டித்தும் கலசா- பண்டூரி கால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் வட கர்நாடகா விவசாயிகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் வட கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மகதாயி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கோவாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி டிசம்பர் 15-ந் தேதிக்குள் நல்ல தீர்வு காணப்படும் என தடாலடியாக அறிவித்தார் கர்நாடகா பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எதியூரப்பா. கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் எதியூரப்பா இந்த விளையாட்டில் குதித்தார்.
கோவாவில் பாஜக முதல்வர் மனோகர் பாரிக்கர் இருப்பதால் மகதாயி பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம்; வட கர்நாடகா விவசாயிகள் வாக்குகளை வாங்கலாம் என்பது எதியூரப்பாவின் கணக்கு. இதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வீட்டில் கோவா முதல்வர் பாரிக்கரை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தினார் எதியூரப்பா.

எதியூரப்பா திட்டம் அம்பேல்
ஆனால் கோவா நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவின் கூட்டணி கட்சி அமைச்சரோ, மகதாயி நதிநீரை ஒரு சொட்டு கூட கர்நாடகாவுக்கு தரவே முடியாது என அடித்து சொன்னார். இதனால் மனோகர் பாரிக்கர் பல்டியடிக்க எதியூரப்பாவின் திட்டம் பனால் ஆனது.

போராடும் விவசாயிகள்
இதனால் கொந்தளித்து போன வட கர்நாடகா விவசாயிகள் இப்போது பாஜக, எதியூரப்பாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துவிட்டனர். இது தொடர்பாக எதியூரப்பாவை சந்தித்து பேசியும் பலன் ஏற்படவில்லை.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இதையடுத்து பாஜக- எதியூரப்பாவை கண்டித்தும் மகதாயி நீரை கொண்டுவதற்கான கலசா- பண்டூரி கால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் வடக்கு கர்நாடகாவில் இன்று விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் வட கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள்- கன்னட அமைப்புகள்
இப்போராட்டத்தால் கோவா- பெல்காம் இடையேயான பேருந்து சேவை முடங்கியது. சாலைகளில் டயர்களை தீ வைத்து கொளுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூருவில் பாஜக தலைமை அலுவலகம் முன்பாகவும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் கன்னட அமைப்புகளும் கை கோர்த்துக் கொண்டிருப்பது பாஜகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications