ஆளுநர் விவகாரம்.. கடிதம் அனுப்புவதால் எதுவும் நடக்கப் போவதில்லை.. சொல்கிறார் தமிழிசை செளந்தரராஜன்!
புதுச்சேரி: ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி திமுகவினர் குடியரசுத் தலைவரிடம் கடிதம் அளிப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர் - மாநிக அரசு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இதேபோல் தமிழ்நாட்டில் திமுக - ஆளுநர் ஆர்என் ரவி இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. சனாதனம், திராவிடம், திருக்குறள், திருவள்ளுவர், கலாச்சாரம், தமிழ், பண்பாடு, இந்திய வரலாறு என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளுநர் ஆர்என் ரவி பேசி வரும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
சனாதனம் + ஆளுநர் + பாஜக.. பிராமணர்கள் இந்துக்களுக்கு செய்தது என்ன? ஓப்பனாக பேசிய ஆ.ராசா -EXCLUSIVE
திமுக முடிவு
இதனால் ஆளுநர் ஆர்என் ரவியை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டன. அதுமட்டுமல்லாமல் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களையும் ஆளுநர் ஆர்என் ரவி வேண்டுமென்றே கிடப்பதில் போட்டுள்ளதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்தது.
எம்பி-க்கள் ஆதரவு
இதற்காக ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணியில் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக திமுக கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயம் வந்து ஆளுநரை திரும்பப் பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட்டனர். இதனை திமுக நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் வழங்க உள்ளது.
தமிழிசை செளந்தரராஜன் கருத்து
இதுகுறித்து புதுச்சேரி துணை நிலைஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஆளுநருக்கு கருத்து கூறுவதற்கு உரிமை உள்ளது. ஆளுநரின் கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க் கருத்து சொல்லலாம். ஆனால் கருத்து சொல்லிவிட்டார் என்பதற்காகவே திரும்பப்பெற முறையிடுவது சரியல்ல என்பதே என் கருத்து.
எதுவும் நடக்கப்போவதில்லை
ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் முதல் முதல் குடிமகன் வரை அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. அதனால் ஆளுநர் ஆர்என் ரவி அவரது கருத்தை சொல்லுகிறார். ஆனால் கருத்து சொல்லுகிறார் என்பதற்காகவே அவரை திரும்பப்பெற வேண்டும் என்பது தேவையில்லாதது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கடிதம் கொடுப்பதால், எதுவும் நடக்கப்போவதில்லை. நாங்களும் நடத்துவோம் என்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தேவையற்றது என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார்.