6 முறை சுடப்பட்ட இளைஞர்! உடலிலேயே இருக்கும் 2 குண்டுகள்! ராஞ்சி இஸ்லாமிய போராட்டத்தில் கொடூரம்
ராஞ்சி: நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி ஜார்கண்ட் ராஞ்சியில் நடந்த போராட்டம் வன்முறையானது. போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவரிடன் உடலில் 6 குண்டுகள் பாய்ந்தது. 4 குண்டுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ள நிலையில் உடலில் உள்ள 2 குண்டுகளுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். போராட்டத்தில் பங்கேற்காமல் மார்க்கெட் சென்று திரும்பியபோது தன்மீது குண்டு பாய்ந்ததாக அவர் கூறியுள்ளார்.
இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர்சர்மா டிவி விவாதத்தில் சர்ச்சையாக பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நேற்று முன்தினம் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சில இடங்களில் வன்முறை வெடித்தது.
நபிகள் நாயகம் மீது அவதூறு: நுபுர் சர்மா தலையை வெட்ட உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கைது
ஜார்கண்டில் வன்முறை
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத், சாரன்பூர் உள்பட 6 இடங்களிலும், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் போராட்டம் நடந்தது. இந்த 7 இடங்களில் நடந்த போராட்டம் திடீரென்று வன்முறையாக உருமாறியது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டது. இதையடுத்து தடியடி நடத்தப்பட்டது. ஜார்கண்ட்டை பொறுத்தமட்டில் ராஞ்சி இக்ரா மசூதியில் இருந்து மனிதசங்கிலியாக தினசரி மார்க்கெட் நோக்கி போராட்டக்காரர்கள் ஊர்வலம் சென்றபோது வன்முறை வெடித்தது.
துப்பாக்கிச்சூடு
இதையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இஸ்லாம் நகரை சேர்ந்த 15 வயது நிரம்பிய முதாசீர், மற்றும் மகாத்மா காந்தி ரோட்டில் உள்ள கிறிஸ்டியா நகரை சேர்ந்த ஷாகீல் ஆகியோர் குண்டு பாய்ந்து இறந்தனர். மேலும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயமடைந்தனர். அதோடு வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 10 போலீசாரும் காயமடைந்தனர். பதற்றம் நிலவுவதால் அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞரை துளைத்த 6 குண்டு
இதற்கிடையே காயமடைந்த போலீசார் உள்பட 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் அப்சர் என்ற இளைஞர் மீது 6 குண்டுகள் பாய்ந்த விஷயம் தெரியவந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்சரின் உடலில் இருந்து 4 குண்டுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 குண்டுகள் எடுக்கப்பட வேண்டி உள்ளது. இந்த குண்டுகளை அவரது உடலில் இருந்து விரைவில் டாக்டர்கள் வெளியே எடுக்க உள்ளனர்.
மார்க்கெட்டில் இருந்து திரும்பியபோது..
இதுபற்றி அப்சர் கூறுகையில், ‛‛நான் மார்க்கெட்டில் இருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தேன். நான் போராட்டத்தில் எதுவும் ஈடுபடவில்லை. நான் சென்றபோது போராட்டக்காரர்கள் கற்களை வீசிக்கொண்டிருந்தனர். இதனால் அங்கிருந்து வேகமாக செல்ல முயன்றேன். ஆனால் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உடலில் 6 குண்டுகள் பாய்ந்தது. இதனால் அப்படியே சுருண்டு கீழே விழுந்துவிட்டேன். உடலில் உள்ள 2 குண்டுகளை இன்னும் சில நாட்களில் வெளியே எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்'' என்றார். இதேபோல் குண்டு காயமடைந்தது பற்றி சிகிச்சையில் உள்ள தபராக் கூறுகையில், ‛‛நான் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த போராட்டத்தை பார்த்தவுடன் அங்கிருந்து ஓடினேன். அப்போது என் மீது குண்டு பாய்ந்தது'' என்றார்.
விசாரணை குழு
இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமிதாப் கவுசால், கூடுதல் டிஜிபி சஞ்சய் ஆகியோர் உள்ளனர். இவர்கள் சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி 7 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.