‛மின்னணு இன்டர்லாகிங் சிஸ்டம்’..ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் இதுதான்.. அஸ்வின் வைஷ்ணவ் பரபர தகவல்
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் தான் விபத்துக்கான மூலக்காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பொறுப்பானவர்களையும் கண்டுபிடித்துள்ளதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரபரப்பாக தெரிவித்துள்ளார். ரயில் விபத்து தொடர்பாக அவரை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் தடம்புரண்டது. சரக்கு ரயில் மீது மோதியதில் அந்த ரயில் தடம் புரண்டது. மேலும் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் விழுந்தது.

இந்தவேளையில் அந்த தண்டவாளத்தில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இப்படி 3 ரயில்கள் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 290ஐ தாண்டி 300ஐ நெருங்குகிறது. ரயில் விபத்துக்கான சரியான காரணம் பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே தான் பிரதமர் மோடி நேற்று மாலை ஒடிசா சென்று விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ரயில் விபத்து குறித்து அவர் அங்கிருந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே தான் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கின. ஒரு டிராக்கில் எப்படி 2 ரயில்கள் வந்தன. சிக்னல் பிரச்சனையால் இந்த கோர விபத்து நடந்ததா? விபத்துக்கு யார் பொறுப்பேற்பது? விபத்துக்கான காரணத்தை கூறாமல் மத்திய அரசு தவிர்ப்பது ஏன்? என பல கேள்விகளை கேட்டனர். மேலும் இந்த விபத்துக்கு பொறுப்பேற்று அஸ்வினி வைஷ்ணவ் தனது பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே தான் ரயில் விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்த உயர்மட்ட அளவிலான விசாரணை நடந்து வருகிறது. அதோடு விபத்து நடந்த இடத்தில் தண்டவாள சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை இன்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேற்பார்வை செய்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒடிசா ரயில் விபத்துக்கான மூலக்காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். தற்போது தண்டவாளம் சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தண்டவாளத்தை புதன்கிழமை காலைக்குள் சீரமைத்து விட வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். விபத்து நடந்த இடத்தில் இருந்து அனைத்து உடல்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை அறிக்கை விரைவில் கிடைக்கும்.
இருப்பினும் நாங்கள் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளோம். விபத்துக்கு பொறுப்பானவர்களும் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். மின்னணு இண்டர் லாக்கிங் சிஸ்டத்தால் ஏற்பட்ட மாற்றத்தால் இது நடைபெற்றுள்ளது. தற்போது மறு சீரமைப்பு பணிகளில் தான் எங்கள் முழு கவனமும் உள்ளது. கவச் பாதுகாப்பு அமைப்புக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மம்தா பானர்ஜி சொன்ன காரணம் இல்லை. மின்னணு இண்டர் லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் இது நடந்துள்ளது'' என்றார். இதன்மூலம் ஒடிசா ரயில் விபத்துக்கு மின்னணு இண்டர் லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட குளறுபடி தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications