இலங்கை கடற்படைக்காக இந்தியா தயாரித்த ரோந்துக் கப்பல் கோவாவில் வெள்ளோட்டம்... வரலாற்றில் முதல் முறை
பனாஜி: இலங்கை கடற்படைக்காக கோவா கப்பல் தளத்தில் கட்டப்பட்ட 2 ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டன. வெளிநாடு ஒன்றுக்கு இந்தியா ஒரு கப்பலை தயாரித்து வழங்குவது வரலாற்றில் இதுவே முதல் முறை.
சயுரால என்று இலங்கையால் பெயரிடப்பட்டுள்ள ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கோவா கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 2350 டன் எடையும், 105 மீட்டர் நீளத்தையும் கொண்ட இந்தக் கப்பலில் ஹெலிகாப்டர் இறங்கு தளமும் உள்ளது.
சுமார் 4500 கடல் மைல் தூரம் வரை கண்காணிப்பில் ஈடுபடக் கூடிய இந்தக் கப்பலில், 18 அதிகாரிகள் மற்றும் 100 மாலுமிகள் பணியாற்றலாம். இக்கப்பலை இந்தியா அடுத்த ஆண்டு இலங்கைக்கு வழங்கும்.
கோவா கப்பல் கட்டும் தளத்தில் நேற்று இந்த கப்பலின் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சக அதிகாரி வசந்தா குணவர்த்தன வெள்ளோட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சக அதிகாரி சஞ்சய் பிரசாத், இந்தியாவுக்கான இலங்கை எசல வீரக்கோன், கடற்படையின் முன்னாள் தளபதிகளான அட்மிரல் அருண் பிரகாஸ், அட்மிரல் சுரேஸ் மேத்தா, கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவரான அட்மிரல் சேகர் மிட்டல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.