தேடப்படும் குற்றவாளி லலித் மோடிக்கு உதவி... அலறும் சுஷ்மாவை காப்பாற்ற துடிக்கும் மத்திய அரசு!!
டெல்லி: 'தேடப்படும் குற்றவாளி' லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் சிக்கி அமைச்சர் பதவியை எதிர்க்கட்சிகள் காவு கேட்டு வரும் நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று மத்திய அரசும் பாரதிய ஜனதாவும் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின்போது, மேட்ச் பிக்ஸிங்கில் சுமார் ரூ.425 கோடிக்கு ஊழல் நடந்ததாகவும், இதில் லலித் மோடிக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த விசாரணையில் இருந்து தப்பிய லலித் மோடி, கடந்த 2010-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் போய் பதுங்கினார். அதன்பிறகு அவர் இந்தியா திரும்ப மறுத்துவிட்டார். அதன்பிறகு தேடப்படும் குற்றவாளியாகவும் லலித் மோடியை அமலாக்கத் துறை அறிவித்தது.,
இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் சிகிச்சை பெற்று வரும் மனைவியை பார்ப்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்ல விசா வழங்கக் கோரி இங்கிலாந்து அரசிடம் லலித் மோடி கடந்த ஆண்டு விண் ணப்பித்திருந்தார். ஆனால், இந்தியாவில் அவர் மீது வழக்கு உள்ளதால் விசா வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டது.
Sometime in July 2014 Lalit Modi spoke to me that his wife was suffering from Cancer and her surgery was fixed for 4th Aug in Portugal.
— Sushma Swaraj (@SushmaSwaraj) June 14, 2015
இதையடுத்து லலித் மோடிக்கு விசா வழங்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து எம்.பி. கீத் வாஸ் பரிந்துரை செய்தார். இந்நிலையில் லலித் மோடிக்கு விசா உட்பட பயண ஆவணங்கள் வழங்க இங்கிலாந்து குடியேற்ற துறைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நெருக்கடி கொடுத்தார். நானும் பரிந்துரை செய்தேன் என்று வாஸ் கூறியதாக இங்கிலாந்து ஊட கங்களில் செய்தி வெளியானது. இது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு தேடப்படுகிற குற்றவாளிக்கு எப்படி சுஷ்மா உதவலாம் என்றும் அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தாம் மத்திய அமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பு நடந்தது இது என்று சுஷ்மா பம்மி வருகிறார்.
அதே நேரத்தில் லலித் மோடியின் சட்ட நிறுவனமான யு.யு. லலித் நிறுவனத்தின் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி கவுசல் பணிபுரிவதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
அத்துடன் சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் கவுசல், லலித் மோடியை தொடர்பு கொண்டு தமது உறவினர் ஜோதிர்மாயிக்கு லண்டனில் உள்ள சச்செக்ஸ் பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்புக்கான இடம் பெற்றதும் வெளியாகி உள்ளது.
ஒட்டுமொத்தமாக சுஷ்மா ஸ்வராஜ் குடும்பமே இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி' லலித் மோடிக்கு மிக நெருக்கமாக உதவியாக இருந்துள்ளனர். ஆனால் சுஷ்மா ஸ்வராஜோ, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ததாக ட்விட்டர் பக்கங்களில் தன்னிலை விளக்கம் கொடுத்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் மீது பிரதமர் மோடி அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் வரிந்து கட்டிக் கொண்டு சுஷ்மாவை காப்பாற்ற போராடி வருகின்றனர். அதுவும் அமித்ஷா, சுஷ்மா ஸ்வராஜூக்கு ஆதரவாக களம் இறங்குவதற்கு முன்பாக ராஜ்நாத்சிங் மற்றும் அருண்ஜேட்லி ஆகிய மூத்த அமைச்சர்களுடன் விவாதித்துவிட்டே கோதாவில் குதித்திருக்கிறார்..
மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் சற்று அதிருப்தியில் சுஷ்மா இருந்த போதும் அவரை காப்பாற்றுவதற்கும் அந்த இயக்கமும் முன்வந்துள்ளது. என்னதான் தேடப்படும் குற்றவாளிக்கு உதவினார் என்பது உண்மையாக இருந்தாலும் அதை செய்தவர் வெளியுறவுத்துறை அமைச்சரான 'நம்மவர்' என்ற பதைபதைப்பில் பாரதிய ஜனதா பரிவாரங்கள் சுஷ்மாவை காப்பாற்ற போராடுகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.