காங்- இடதுசாரி கூட்டணியில் இடம்பெறத் தயார்: மமதா பானர்ஜி அறிவிப்பு
டெல்லி: தமது பரம எதிரியான இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்கவும் தயார் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சியை 2011ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வந்தவர் மமதா பானர்ஜி. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக கணிசமான இடங்களைக் கைப்பற்றலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்தும் நேரு 125வது பிறந்த நாள் மாநாட்டில் இடதுசாரித் தலைவர்களுடன் மமதா பானர்ஜியும் கலந்து கொண்டுள்ளார். மேலும் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த மமதா, மதவாத சக்திகளைத் தடுக்கவும் நாட்டின் நலன், அமைதி கருதியும் நிலைத்தன்மை ஏற்படவும் காங்கிரஸ் முன்முயற்சி எடுக்கும் கூட்டணியில் இணைவோம் என்று கூறியுள்ளார்.
ஏற்கென்வே காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக அணியில் இல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணிக்கு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மமதாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.