ஈராக்கிலிருந்து மேலும் 2200 இந்தியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியா வருவார்கள் - வெளியுறவுத்துறை
டெல்லி: ஈராக்கில் சிக்கிதவிக்கும் மேலும் 2200 இந்தியர்கள் இன்னும் 48 மண் நேரத்திற்குள் இந்தியா வந்தடைவார்கள் என்று அதிகாரப் பூர்வ செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஈராக்கில் வசிக்கும் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்களான இருபிரிவினரிடையேயான உள்நாட்டுக் கலவரம் மிகவும் கடுமையாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த 46 செவிலியர்கள் அக்கிளர்ச்சியாளர்களால் அங்கு சிறை பிடிக்கப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் பத்திரமாக நேற்று முன்தினம் நாடு திரும்பினர். இந்நிலையில் நேற்று மேலும் 200 இந்தியர்கள் ஈராக்கிலிருந்து பாதுகாப்பாக இந்தியா வந்தடைந்துள்ளனர்.
மேலும், 117 பேர் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தை இன்று வந்தடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈராக்கில் உள்நாட்டுப் போரானது நாளுக்கு நாள் கடுமை அடைந்து வருவதால், அங்கு சிக்கித்தவிக்கும் மேலும் 2200 இந்தியர்கள் நாடு திரும்ப கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில், அங்கு பணிபுரியும் 600 இந்தியர்களுக்கு அவர்களுடைய நிறுவனங்களே விமான டிக்கெட்டுகளை அளித்துவிட்டது. மீதமுள்ள 1600 பேர், இந்திய அரசாங்கத்தில் மூலமாக அடுத்த 36 முதல் 48 மணி நேரத்திற்குள் டெல்லி வந்தடைவார்கள் என்று வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதீன் தெரிவித்துள்ளார்.
இந்தியா திரும்புவதற்காக பதிவு செய்துள்ள இந்தியர்களுக்கான விமானங்கள் தயாராக உள்ளது. மேலும், அவர்களுடைய பயணத்திற்கான கோப்புகளும் தயார் நிலையில் பாக்தாத் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
4 தூதரக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இந்தியர்கள் யாரெல்லாம் இந்தியா திரும்ப விரும்புகின்றனரோ, அவர்களுடைய விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.