சோனியா-ராகுல் மீது விமர்சனம்- காங்கிரஸில் ப.சிதம்பரத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது!
டெல்லி: சோனியாவும் ராகுலும் மக்களை தொடர்ந்து சந்திக்க வேண்டும் என்றும் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகலாம் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துகளுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தலில் ப.சிதம்பரம் போட்டியிட மறுத்துவிட்டார். சிவகங்கை லோக்சபா தொகுதியில் தமது மகன் கார்த்திக் சிதம்பரத்தை நிறுத்தினார். ஆனால் கார்த்திக் வெற்றி பெறவில்லை.
மத்தியிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை குறிவைத்து ப.சிதம்பரம் காய்களை நகர்த்தி வந்தார்.
Senior leaders should give their adivce to Congress leadership in person rather than thro' media. This shows the leadership in poor light.
— Anil Shastri (@anilkshastri) October 26, 2014
சோனியா-ராகுல் மீது விமர்சனம்
இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகலாம் என்ற கருத்தை சிதம்பரம் தெரிவித்திருந்தார். மேலும் சோனியாவும் ராகுலும் மக்களை தொடர்ச்சியாக சந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
ஜி.கே.வாசன் பாய்ச்சல்
ப.சிதம்பரத்தின் இந்த கருத்துகளுக்கு மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கடுமையாக எதிர்த்தார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள எந்த ஒரு காங்கிரஸ் தொண்டனும் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் கட்சித் தலைவராக வேண்டும் என்று நினைக்கவில்லை என்று பதிலடி கொடுத்தார்.
அனில் சாஸ்திரி
இதேபோல் மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சர் அனில் சாஸ்திரியும் தமது ட்விட்டர் பக்கத்தில் சிதம்பரத்தை சாடியுள்ளார். "மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தங்களது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் மேலிடத்துக்கு நேரில்தான் தெரிவிக்க வேண்டும். ஊடகங்களின் மூலம் தெரிவிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.
ரஷீத் ஆல்வி
மற்றொரு காங்கிரஸ் தலைவரான ரஷீத் ஆல்வி கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு அதற்குரிய விதிகளின் படியே இயங்கி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் யாரும் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடலாம். சோனியா தற்போது தலைவராகவும் ராகுல் துணைத் தலைவராகவும் உள்ளனர். இது தொடர்ந்து நீடிக்கும். என்னைப் பொறுத்தவரையில் சோனியாவும் ராகுலும் கட்சித் தலைவர்களையும் தொண்டர்களையும் தொடர்ந்து சந்தித்தே வருகின்றனர் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான விலாஸ் முத்தேம்வாரும் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.