பணஒழிப்பு... இதைவிட இன்னும் கடுமையான விளைவுகள் உண்டு!- எச்சரிக்கும் ப.சிதம்பரம்
மும்பை: சரியான முன்னேற்பாடின்றி ரூ 500, 1000 நோட்டுகளை ஒழித்ததால் இன்னும் மோசமான விளைவுகளை நாடு எதிர்கொள்ளும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப.சிதம்பரம், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்...
கே: ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன?
ப.சிதம்பரம்: நாட்டில் புழக்கத்தில் இருந்து, 86 சதவீத ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றதால், ஏற்படக்கூடிய முதல் கட்ட விளைவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த முதல் கட்ட விளைவுகள், இப்போது முதல் இன்னும் பல வாரங்கள் தொடரும். அதன் பின்னர் இரண்டாவது கட்ட விளைவுகளை நீங்கள் பார்க்கலாம்.
மத்திய அரசின் நடவடிக்கையில் எனக்கு எழுந்துள்ள ஒரு சந்தேகம், அவர்கள் அரசில் உள்ள அறிவார்ந்த பொருளாதார நிபுணரான டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியனை கலந்து ஆலோசிக்கவில்லையோ என்பதுதான்.
கேள்வி: முதல் கட்ட விளைவுகள், 2-ம் கட்ட விளைவுகள் என்னென்ன?
பதில்: இப்போது நிறைய மக்கள் மிகக் குறைந்த பணத்துடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். அவர்களிடம் நுகர்வு இல்லை. அழுகக் கூடிய பழங்கள், காய்கறிகள் விற்பனை இல்லை.
2-ம் கட்ட விளைவுகள் என்னும்போது, அதை நீங்கள் திருப்பூர், சூரத் போன்ற வணிக நகரங்களில் பார்க்கலாம். தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோய்க் கொண்டிருக்கிறது. ஆட்குறைப்புகள் தொடங்கி விட்டன. சம்பளம் தரப் பணமில்லை.
வயல்களில் விதைகளை விதைத்துள்ள விவசாயிகளுக்கு உரம் வாங்கவும், தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கவும் பணம் இல்லை என்னும்போது 2-ம் கட்ட விளைவுகள் முக்கியமாக உணரப்படும்.
எனவே விளைவுகள் நிச்சயம் எதிர்மறையானதாக அமையும் என்றுதான் நான் கருதுகிறேன்.
பாதிப்புகளின் அளவு என்ன என்பதை இப்போதே கூறி விட முடியாது.
கேள்வி: கருப்பு பண ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கையின் பலன்கள் குறித்து அறிய 50 நாட்கள் ஆகும் என பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறாரே?
பதில்: தனிப்பட்ட நபர்களின் பணப்புழக்க நெருக்கடி வேண்டுமானால் 50 நாட்களுக்குப் பிறகு ஓரளவு எளிதாகலாம். ஆனால் வேறு பல பிரச்சினைகளை இது தீர்க்காது.
ஒரு சின்ன கணக்கு. அவர்கள் 2 ஆயிரத்து 200 கோடி எண்ணிக்கையிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளனர். ரூபாய் நோட்டு அச்சிடும் அனைத்து அச்சகங்களும் மாதம் ஒன்றுக்கு 300 கோடி நோட்டுகள்தான் அச்சடிக்க முடியும். அப்படி பார்க்கிறபோது, தேவையான நோட்டுகளை அச்சடிக்க 7 மாதங்கள் ஆகும். குறைந்த மதிப்பிலான நோட்டுகளை அச்சடிக்க மேலும் 5 மடங்கு காலம் ஆகும். இதையெல்லாம் அவர்கள் சிந்திக்க வில்லை என்று கருதுகிறேன். இது அரசாங்கத்துக்கு அசாதாரணமானது அல்ல.
இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையினால், கள்ள நோட்டுகளை முழுமையாக அகற்றிவிட முடியாது. ரூ.400 கோடி அளவுக்குத்தான் கள்ளநோட்டுகள் உள்ளன. அதாவது மொத்த புழக்கத்தில் இருந்து ரூ.16 லட்சத்து 24 ஆயிரம் கோடியில் இது 0.028 சதவீதம். கள்ளப் பணத்தை ஒழிப்பதாக கூறிக் கொண்டு நல்லப் பணத்தை ஒழித்துவிட்டார்கள்.
-இவ்வாறு ப சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications