நல்லுறவு நடவடிக்கை... 88 பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!
டெல்லி: நல்லுறவு நடவடிக்கையாக இந்தியாவின் அரேபிய கடற்பரப்பு எல்லையில் அனுமதியின்றி மீன்பிடித்ததாக கைது செய்யப் பட்ட 88 பாகிஸ்தான் மீனவர்களை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இந்தியாவின் அரேபிய கடற்பரப்பு எல்லையில் அனுமதியின்றி மீன்பிடித்ததாக 88 பாகிஸ்தான் மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு, பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், எல்லைதாண்டி கடற்பகுதியில் மீன்பிடித்துகைதான 88 மீனவர்களை விடுதலை செய்வதாக அப்போது மோடி உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து, கடல் மார்க்கமாக பிடிபட்ட 88 மீனவர்களையும் நட்புறவு நடவடிக்கையாக மத்திய அரசு நேற்று விடுதலை செய்தது. விடுவிக்கப் பட்ட 88 மீனவர்களில் 6 பேர் மைனர்கள் ஆவர். அடாரி-வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 113 இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்திருந்தது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் லாகூரிலிருந்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி வாகா எல்லை வழியாக இந்தியா வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.