நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது : அவையை முடக்காதீ்ர்- பாஜக வேண்டுகோள்
டெல்லி: பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. ''ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தற்கொலை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை கிளப்ப எதிர்கட்சிகள் அவையை முடக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அதனால், நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்காதீர்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், பிப்ரவரி 25ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 29ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன.
கடந்த சில நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள், முழுமையாக நடைபெறாததால் பல முக்கிய மசோதாக்கள் கிடப்பில் உள்ளன.
இந்நிலையில், இந்த பட்ஜெட் கூட்டத் தொடரையாவது பிரச்னைகள் ஏதுமின்றி முழுமையாக நடத்த வேண்டும் என்ற முயற்சியை ஆளும் கட்சியான பாஜக மேற்கொண்டுள்ளது.
[Photos: Union Budget Session 2016]
இதன்படி, நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு அழைப்பு விடுத்தார்.
விவாதிக்க தயார்
இது தொடர்பாக டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தற்கொலை விவகாரம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.
மக்களும் அறிய வேண்டும்
அரசு எந்தத் தவறையும் செய்யவில்லை. அதனால், அனைவரும் தங்கள் பிரச்னையைக் கூறி விவாதிக்க வாய்ப்பளிக்கப்படும். ஜே.என்.யு. விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய அவர் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, ஆலோசனை செய்து அனைத்து முடிவுகளையும் எடுக்கலாம்.
முடக்க வேண்டாம்
நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கும் நடவடிக்கைகள் வேண்டாம். காங்கிரஸ், இடதுசாரிகள் அல்லாத பிராந்தியக் கட்சிகள் நாடாளுமன்றம் சுமுமாக நடைபெறுவதையே விரும்புகின்றன. நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்குவதால் முக்கியப் பிரச்னைகளைப் பேச முடியவில்லை என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய மசோதாக்கள்
மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது மிகவும் முக்கியமானது. எதிர்க்கட்சியினர் நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையாவது அவை நடவடிக்கைகள் பயனுள்ள வகையில் இருக்க வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஜி.எஸ்.டி. உள்பட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி, மனை வணிக மசோதா, உள்நாட்டு நீர்வழி மசோதா, விமானக் கடத்தலுக்கு எதிரான மசோதா உள்ளிட்டவை மிகவும் முக்கியமானவை என்றும் தெரிவித்தார்.
பாஜக கையில் உள்ளது
இதனிடையே அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், லோக்சபா காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ''வெங்கைய்யா நாயுடு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒப்புக்காக நடத்தப்பட்டது என்றனர்.
மத்திய அரசின் கையில் இருக்கு
நாட்டில் பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் பா.ஜ.க. தலைவர்கள் மீது பிரதமர் மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க வேண்டுமா? வேண்டாமா என்பது மத்திய அரசின் கைகளில்தான் உள்ளது என்றும் கூறினர்.
ஜி.எஸ்.டி மசோதா நிறைவேறாது?
பொதுவான கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ள மசோதாக்களைத் தவிர பிற மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்பாதியில் ஜி.எஸ்.டி. போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் குலாம் நபி ஆசாத். மொத்தத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் புயலை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.